Last Updated : 26 Sep, 2020 10:52 AM

 

Published : 26 Sep 2020 10:52 AM
Last Updated : 26 Sep 2020 10:52 AM

போதைப் பொருட்களை நான் பயன்படுத்துவதுமில்லை, அவற்றை ஊக்குவிப்பதுமில்லை - கரண் ஜோஹர் அறிக்கை

போதைப் பொருட்களை தான் பயன்படுத்துவதுமில்லை, அவற்றை ஊக்குவிப்பதுமில்லை என்று இயக்குநர் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும், சுஷாந்த் சிங்குக்கு அவர் போதைப் பொருட்களை வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட என்சிபி அதிகாரிகள், ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் ஆகியோருக்கு என்சிபி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நேற்று என்சிபி அதிகாரிகள் முன் ஆஜரானார். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் உள்ளிட்டோர் இன்று ஆஜராகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட நாள் முதலே சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களில் கரண் ஜோஹரும் ஒருவர். சுஷாந்த்துக்கு கரண் ஜோஹர் படவாய்ப்புகளை மறுத்து வாரிசு நடிகர்களுக்கே முன்னுரிமை கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு கரண் ஜோஹரின் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அதில் கலந்து பிரபலங்கள் அனைவரும் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகவும், இதனால் போதைப் பொருள் வழக்கில் கரண் ஜோஹருக்கு தொடர்பிருக்கலாம் என்கிற ரீதியில் சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கரண் ஜோஹர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கரண் ஜோஹர் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு என் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக சில ஊடகங்களின் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன.

அது முற்றிலும் தவறான தகவல் என்று கடந்த ஆண்டே நான் மறுப்பு தெரிவித்திருந்தேன். தற்போது இவை மீண்டும் தவறான முறையில் பரப்பப்படுவதால் இதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

எந்த ஒரு போதை வஸ்துக்களும் அந்த பார்ட்டியின் போது பயன்படுத்தப்பட வில்லை. போதைப் பொருட்களை நான் பயன்படுத்துவதுமில்லை, அவற்றை ஊக்குவிப்பதுமில்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி மீண்டும் தெளிவுப்படுத்துகிறேன்.

என்னையும், என் குடும்பத்தையும், என் தயாரிப்பு நிறுவனத்தை களங்கப்படுத்தவே இதுபோன்ற பொய்யான செய்திகளும், வீடியோக்களும் பரப்பப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் என்னைப் பற்றிய தவறான செய்திகளை பரப்பத் தொடங்கியிருக்கின்றன. ஊடகத்தில் இருப்பவர்கள் இதை நிறுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இல்லையெனில் இந்த அடிப்படையற்ற தாக்குதல்களுக்கு எதிராக நான் எனது உரிமையை பாதுகாத்துக் கொள்ள சட்டத்தை நாட வேண்டியதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு கரண் ஜோஹர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x