நல்ல நண்பனின் இழப்பால் நொறுங்கிப் போயிருக்கிறேன்: எஸ்பிபி மறைவுக்கு மோகன் பாபு உருக்கம்

நல்ல நண்பனின் இழப்பால் நொறுங்கிப் போயிருக்கிறேன்: எஸ்பிபி மறைவுக்கு மோகன் பாபு உருக்கம்
Updated on
1 min read

நல்ல நண்பனின் இழப்பால் நான் ஆழ்ந்த வருத்தத்தில் நொறுங்கிப் போயிருக்கிறேன் என்று எஸ்பிபி மறைவு குறித்து மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவுக்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் பாபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் அன்பு நண்பர். சிறு வயதில் நாங்கள் இருவரும் ஸ்ரீ காளஹஸ்தியில் ஒன்றாகத் தங்கியிருந்தோம். நாட்கள் ஓட ஓட, இருவரும் திரைத்துறையில் நுழைந்தோம். அவர் பாடகரானார். வித்யானிகேதனில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுக்கும் அவர்தான் சிறப்பு விருந்தினராக வருவார்.

எனது நல்ல நண்பனின் இழப்பால் நான் ஆழ்ந்த வருத்தத்தில் நொறுங்கிப் போயிருக்கிறேன். சென்னையில் நான் துணை இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில் அவரிடம் 100 ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். சமீபகாலம் வரை அந்தக் கடன் பற்றி என்னிடம் விளையாட்டாகச் சொல்லி, அதற்கு வட்டி தர வேண்டும் என்று கிண்டல் செய்து வந்தார். பாலு, உலகப் புகழ்பெற்ற பாடகர். திரைத்துறைக்கு மட்டுமல்லாமல் அவரது இழப்பு ஒட்டுமொத்த தேசத்துக்கே பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடையும் என்று விரும்புகிறேன். அவர் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்".

இவ்வாறு மோகன் பாபு தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in