Published : 25 Sep 2020 08:13 PM
Last Updated : 25 Sep 2020 08:13 PM

எஸ்பிபி மறைவு: தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இரங்கல்

எஸ்பிபியின் மறைவுக்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவுக்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணிப் பிரபலங்கள் வெளியிட்டுள்ள இரங்கல் தொகுப்பு:

அல்லு அர்ஜுன்: சகாப்தம் எஸ்பி பாலசுப்பிரமணியம் இன்று நம்மை விட்டு மறைந்துவிட்டார் என்பது தெரிந்து ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன். ஆனால், அவர் குரல் என்றும் கேட்கப்படும், நினைக்கப்படும். நம் வாழ்வில் கொண்டாடப்படும். இந்திய சினிமாவில் மிக உயர்ந்த ஆளுமைகளில் ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். என்றும் அவருக்கான மரியாதை இருக்கும்.

ராம் கோபால் வர்மா: வாழ்வது முக்கியமல்ல. வாழும்போது மற்றவர்களின் வாழ்க்கைக்கு அந்த நபர் என்ன பங்காற்றியிருக்கிறார் என்பதுதான் முக்கியம். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் மறைந்துவிட்டது. ஆனால், அவர் குரல், இசை உள்ள வரை என்றும் உயிரோடு இருக்கும்.

மோகன்லால்: இசை உலகுக்கு உண்மையான ஒரு இழப்பு. மனமுடையும் செய்தி. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தைத் தந்துள்ளது. உங்கள் இசையின் மூலம் தொடர்ந்து எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள். அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.

நானி: இந்த இதயம் பல லட்சம் பாடல்களாக நொறுங்கிவிட்டன. என் மகனைப் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மனைவியைச் சொன்னது ஒரே ஒரு முறைதான். பாலுவுடன் நான் படப்பிடிப்பில் இருக்கும் போது என் மகன் அந்த சகாப்தத்துடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அவர் இசை வாழும் வரை அவர் கொண்டாடப்படுவார்.

ரவிதேஜா: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தியக் குடும்பங்களில் ஒரு அங்கம். அவரது குரலும், இசைக்கு அவரது பங்காற்றலும் என்றும் நீடித்திருக்கும். ஒவ்வொரு மனித உணர்ச்சிக்கும் பாடல்கள் பாடியிருக்கும் அந்த சகாப்தத்தின் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் இழப்பை என்றும் உணர்வோம்.

ஜுனியர் என்.டி.ஆர்: இந்திய இசை அதற்கு மிகவும் பிடித்த மகனை இழந்துவிட்டது. நொறுங்கிப் போயிருக்கிறேன். ஐம்பது வருடங்களைத் தாண்டிய ஒரு இசை சகாப்தம் எஸ்பிபி. 40,000 பாடல்களுக்கு மேல் உயிர் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் இசை இருக்கும் வரை நீங்கள் வாழ்வீர்கள் சார்.

வெங்கடேஷ்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவைப் பற்றிய செய்தி கேட்டு அதிக வருத்தமடைந்தேன். நாம் இன்று ஒரு சாதனையாளரை இழந்திருக்கிறோம். ப்ரேமா, பவித்ரா பந்தம் உள்ளிட்ட எனது சிறந்த படங்களில் அவரோடு பணியாற்றும் பெருமை எனக்குக் கிடைத்தது. நீங்கள் விட்டுச் சென்ற மரபு என்றும் வாழும் சார். அவரது குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x