Published : 25 Sep 2020 07:16 PM
Last Updated : 25 Sep 2020 07:16 PM

உலகைத் தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்: எஸ்பிபிக்கு சிம்பு புகழாஞ்சலி

உலகைத் தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் என்று எஸ்பிபி மறைவு குறித்து சிம்பு தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவுக்கு நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"எத்தனை ஆயிரம் பாடல்கள்? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்? சிட்டாய்ப் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன்.

சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ்பிபி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க... காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள, உலகைத் தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்.

என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார். குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள்.

என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது.

அதைப் போல... "காதல் அழிவதில்லை" படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் "இவன்தான் நாயகன்" என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார்.

முதன் முதலில் "இவன்தான் நாயகன்" என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சார்.

யாரையும் காயப்படுத்தாத அந்தக் குணம். தவறிப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்புக் கோரும் தன்மை, ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கடந்தவர்.

விடை கொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்கக் காத்திருக்கிறேன் பாடு நிலாவே... லவ் யூ".

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x