Last Updated : 25 Sep, 2020 12:44 PM

 

Published : 25 Sep 2020 12:44 PM
Last Updated : 25 Sep 2020 12:44 PM

சுஷாந்த் வழக்கு விசாரணை: பழைய வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியே வந்தது எப்படி? - பாதுகாப்பு அம்சம் குறித்து வாட்ஸ் அப் விளக்கம்

மும்பை

போதை மருந்து விவகாரத்தில் விசாரிக்கப்பட்டு வரும் ரியா சக்ரபர்த்தி உள்ளிட்ட மற்றவர்களின் பழைய வாட்ஸ் அப் உரையாடல்களைப் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் எப்படிக் கண்டுபிடித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், வாட்ஸ் அப் உரையாடல்களின் பாதுகாப்பு குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் விசாரணை செய்யும்போது ரியாவின் மொபைல் க்ளோன் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வரும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் பழைய வாட்ஸ் அப் உரையாடல்கள் சிக்கின. இதை வைத்து ஏற்கெனவே பாலிவுட் நட்சத்திரங்கள் சிலருக்கும், அவர்களுடன் தொடர்பிலிருக்கும் சிலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

இதில் சில வாட்ஸ் அப் உரையாடல்கள் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரியாவின் உரையாடல்களும், 2017-ம் ஆண்டு நடந்த ஒரு குழு உரையாடலில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் அவரது மேலாளர் கரிஷ்மா ஆகியோரின் உரையாடல்களும் வெளியாகியுள்ளன.

இந்த உரையாடல்கள் சுஷாந்தின் (முன்னாள்) திறன் மேலாளராக இருந்த ஜெயா சாஹாவின் மொபைலிலிருந்து கிடைத்துள்ளன. ஜெயாவை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயா, தீபிகா மற்றும் கரிஷ்மா உள்ளிட்டோரும் ஒரே வாட்ஸ் அப் குழுவில் இருந்துள்ளனர். கரிஷ்மாவும் க்வான் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனர்களின் அந்தரங்கத் தகவல்கள் பாதுகாக்கப்படும், தனிப்பட்ட உரையாடல்கள் தனிப்பட்ட முறையிலேயே இருக்கும் என்று சொல்லப்படும் வாட்ஸ் அப் செயலியிலிருந்து எப்படி இந்த உரையாடல்கள் வெளியே வந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு வாட்ஸ் அப் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

"இரண்டு பேர் நடுவில் வாட்ஸ் அப்பில் நடக்கும் உரையாடல்களை அந்த இரண்டு பேர் மட்டுமே பார்க்க, படிக்க முடியும். வாட்ஸ் அப் நிறுவனம் நினைத்தாலும் அதைப் பார்க்க முடியாது. ஆனால் அந்த உரையாடல்கள் கூகுள் ட்ரைவ் போன்ற ஏதாவது ஒரு க்ளவுட் சேவையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்போது அவை வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு வரைமுறைகளுக்குள் வராது.

மேலும், அந்தந்த மொபைல்களின் இயங்குதளத்தை (operating system) உருவாக்குபவர்கள் சொல்லும் வழிமுறைகளின் அடிப்படையில்தான் வாட்ஸ் அப் பாதுகாப்பு செயல்படுகிறது. எனவே அந்தந்த மொபைல்களின் பலமான பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தி, உங்கள் மொபைலில் சேமிக்கப்பட்டிருக்கும் வாட்ஸ் அப் தரவுகளை மூன்றாம் நபர் பார்க்கவிடாமல் தடுத்துக் கொள்ளுங்கள்" என்று வாட்ஸ் அப் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப் தரவுகளைத் தெரிந்துகொள்ள, காவல்துறையோ, விசாரணை செய்யும் அரசு அமைப்புகளோ, அந்த பயனரின் மொபைலை க்ளோன் செய்து இன்னொரு மொபைலுக்கு மொத்தத் தரவுகளையும் கொண்டு செல்லலாம். இதனால் அழிக்கப்பட்ட செய்திகள், யாருக்கெல்லாம் அழைப்பு சென்றிருக்கிறது உட்பட அத்தனை தகவல்களையும் அந்த இன்னொரு மொபைல் மூலம் பெறலாம். எனவே, தடயவியல் நிபுணர்களுக்கு இது பெரிய கடினமான காரியம் இல்லை.

பல நட்சத்திரங்களுடன் ஜெயா சாஹாவின் உரையாடல்கள் குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஜெயா, இந்த நட்சத்திரங்களுக்காகத் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை வாங்கி விநியோகம் செய்தாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ரியாவின் உரையாடல்கள் கிடைத்தபோதுதான் ஜெயாவின் பெயர் வெளியே வந்தது. ஜெயாவின் உரையாடல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து பல்வேறு நட்சத்திரங்களின் பெயர்கள் இந்த வழக்கில் வெளியே வந்துள்ளன. ரியா தற்போது சிறையில் உள்ளார்.

அடுத்தகட்ட விசாரணையில் தாங்கள் இந்த மொபைலைப் பயன்படுத்தவில்லை என்றோ, சுஷாந்த் தான் இந்த செய்திகளை அனுப்பச் சொன்னார் என்றோ நீதிமன்றத்தில் வாதாடும்போது சொல்லும் வாய்ப்பும் இருக்கிறது.

நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் முன்பு விசாரணைக்கு நாளை ஆஜராகவுள்ளனர். நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று விசாரணைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x