Last Updated : 23 Sep, 2020 12:17 PM

 

Published : 23 Sep 2020 12:17 PM
Last Updated : 23 Sep 2020 12:17 PM

பட வாய்ப்புக்காகவே ஆதரிக்கின்றனர்: அனுராக் ஆதரவு நடிகைகளைச் சாடிய பாயல் கோஷ்

அனுராக் காஷ்யப்புடன் பணிபுரிந்த நடிகைகள் பட வாய்ப்புகளுக்காகவே அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகை பாயல் கோஷ் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், பிரதமர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 19-ம் தேதி குற்றம் சாட்டியிருந்தார். அனுராக் தன்னோடு பணிபுரிந்த நடிகைகள் குறித்து தன்னிடம் தவறாகக் கூறியதாக பாயல் கோஷ் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். பாயல் கோஷ் கூறியுள்ள புகாருக்கு அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவிகள், நடிகைகள் டாப்ஸி, ஹியூமா குரேஷி, ரிச்சா சட்டா உள்ளிட்ட பலரும் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான் மற்ற நடிகைகளை பற்றி குறிப்பிட்டதற்கான காரணம் குறித்து பாயல் கோஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியிருப்பதாவது:

''நல்லதோ கெட்டதோ அவர் (அனுராக்) என்னிடம் கூறியதைத்தான் நான் கூறினேன். அவர் என்னிடம் கூறிய சில நல்ல விஷயங்களையும் கூட கூறியுள்ளேன். கரண் ஜோஹரோடு எப்போதும் தொடர்பில் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். அமிதாப் பச்சனைப் பிடிக்கும் என்று கூறினார். நான் தவறான விஷயங்களை மட்டுமே குறிப்பிடவில்லை.

பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடுபவர் போல அவர் தன்னைக் காட்டிக் கொள்கிறார். என்னைச் சந்தித்த இரண்டாவது நாளிலேயே தன்னுடைய தோழிகளான நடிகைகளைப் பற்றி என்னிடம் தவறாகக் கூறினார். என்ன மனிதர் அவர்? இப்படித்தான் அவர் பெண்களை மதிக்கிறாரா?

நான் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அவர்களை எனக்குத் தெரியாது. நான் ஏன் அவர்களைப் பற்றிப் பேசவேண்டும்? அனுராக் கூறியதை மட்டுமே நான் கூறினேன்.

ஒருவேளை அவர் பொய் கூட சொல்லியிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. எங்களுக்குள் நடந்த உரையாடலை நான் கூறிவிட்டேன். அவர்கள் ஏன் நேரடியாக அவரிடமே போய் கேட்கக்கூடாது? ஆனால், அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். ஏனெனில் அப்படிச் செய்தால் அவர்களுக்கு அவரிடமிருந்து பட வாய்ப்புகள் வராது. நான் கூறியது பாதிதான். இன்னும் நிறைய உள்ளன. மீண்டும் சொல்கிறேன். நான் யாருக்கு எதிராகவும் பேசவில்லை.

அவர் அவ்வளவு நல்லவர் என்று வாதிடும் அவரது முன்னாள் மனைவிகள் ஏன் அவரை விட்டுப் பிரிந்தார்கள். ஒருவேளை அவரிடமிருந்து கிடைக்கும் ஜீவனாம்சத்துக்காக அவர்கள் ஆதரவு தெரிவித்திருத்திருக்கலாம்''.

இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x