Published : 10 Sep 2020 03:42 PM
Last Updated : 10 Sep 2020 03:42 PM

பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது நீங்கள் செய்திருக்கும் காரியம்: கங்கணாவுக்கு விஷால் புகழாரம்

சென்னை

பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது நீங்கள் செய்திருக்கும் காரியம் என்று கங்கணா ரணாவத்துக்கு விஷால் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கணா ரணாவத் மும்பையைப் பற்றியும், மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசி கருத்துத் தெரிவித்தார். இதனால் நடிகை கங்கணா ரணாவத்துக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்தது.

மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கணா ரணாவத் வீட்டில் பல்வேறு கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், நேற்று (செப்டம்பர் 9) மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்தது. கங்கணாவும் மும்பை வந்ததால் பெரும் சர்ச்சை உருவானது. தொடர்ச்சியாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே மீது குற்றம் சாட்டியும், சவால் விடுத்தும் வருகிறார் கங்கணா ரணாவத்.

இந்நிலையில், கங்கணாவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் விஷால்.

அதில் விஷால் கூறியிருப்பதாவது:

"அன்பார்ந்த கங்கணா,

உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை.

இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும், அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டும் வலிமையாக இருந்தீர்கள். அது உங்களை மிகப்பெரிய உதாரணமாக்குகிறது.

1920-களில் பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது நீங்கள் செய்திருக்கும் காரியம். பிரபலமாக இருந்தால் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு உதாரணமாக இருக்கும்.

உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்".

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முதல் நபராக கங்கணாவுக்கு ஆதரவு தெரிவித்து விஷால் கருத்துத் தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x