Published : 09 Sep 2020 12:35 PM
Last Updated : 09 Sep 2020 12:35 PM

கவிதா ரெட்டியின் மன்னிப்பு உண்மையானதாக இல்லை: சம்யுக்தா ஹெக்டே

பெங்களூரு

கவிதா ரெட்டியின் மன்னிப்பு திருப்திகரமாகவும், உண்மையானதாகவும் இல்லை என்று சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு சம்யுக்தா ஹெக்டேவும், அவரது நண்பர்களும் பெங்களூருவில் உள்ள ஒரு பூங்காவில் உடற்பயிற்சி செய்யச் சென்றுள்ளனர். இவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா ரெட்டி என்பவர், இவர்களை நோக்கித் திட்டியபடியே, நீங்கள் கவர்ச்சி நடனமாடுபவர்களா என்று கேட்டுத் தாக்க முயன்றதாகக் கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாயின.

சம்யுக்தாவும் அவரது நண்பர்களும் பூங்காவில் இருந்தவர்களைத் தொந்தரவு செய்யும் வகையில் சப்தமாக இசை வைத்து உடற்பயிற்சி செய்ததாகவும், அதைக் கேட்டபோது தன்னை அசிங்கமாகப் பேசிய பிறகுதான் கடுமையாக நடந்து கொண்டேன் என்றும் கவிதா ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார்.

சம்யுக்தா ஹெக்டேவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின. பல்வேறு முன்னணி நடிகைகள் சம்யுக்தாவுக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து கவிதா ரெட்டி பகிரங்க மன்னிப்புக் கோருவதாக வீடியோவும், அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். இதனை ஏற்பதாகவும் சம்யுக்தா பேட்டியளித்திருந்தார்.

இதனிடையே நேற்று (செப்டம்பர் 8) சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

"எனக்குக் கிடைத்து வரும் ஆதரவு, அன்பு, எனக்கான பதிவுகள், கிண்டல்கள், ட்வீட்டுகள் என அனைத்துக்கும் நன்றி. அவைதான் (எனது) இந்தக் குரலைப் பெரிதாகக் கேட்க வைத்திருக்கின்றன.

இந்த விஷயம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்த நீங்கள் அனைவரும் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள். ஒரு சமூகமாக இது நமக்கு ஒரு பெருமை. நமது அழகான நகரத்திலோ, வேறெங்கோ கூட, ஒழுக்கத்தின் பெயரால் தடியைத் தூக்கும் இதுபோன்ற விஷயங்களைப் பொறுக்க முடியாது என்பதற்கான விழிப்புணர்வை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். கவிதா ரெட்டியின் மன்னிப்பு திருப்திகரமாகவும், உண்மையானதாகவும் இல்லை. பொதுவில் மன்னிப்பு கேட்ட 16 மணி நேரம் வரை அவர் தனது பதிவுகளையோ, ட்வீட்டுகளையோ நீக்கவில்லை. இது இந்த மன்னிப்பை அவர் எவ்வளவு விளையாட்டாக எடுத்துக் கொண்டுள்ளார் என்பதையும், பொதுமக்கள் முன் தனது பெயர் பாதிக்கப்படுவதால், அதைக் காப்பாற்றச் செய்திருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. இதையும் உங்களில் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆனால், இந்தப் பிரச்சினையில் அவர் மீது கவனம் செலுத்தாமல், நடந்த சம்பவத்தின் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன். இது, எல்லா இடங்களிலும் இருக்கும் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைக்கச் சிறிய வழியை உண்டாக்கும் என்று நம்புகிறேன்.

எனது குடும்பத்துடன் நான் கலந்தாலோசித்தேன். கவிதா ரெட்டியின் வயதை மனதில் வைத்து அவருக்கெதிரான வழக்கை நான் தொடரப்போவதில்லை. அதில் ஆர்வமும் இல்லை. இதுகுறித்து நேற்று காவல்துறையினரிடமும் முறையாகக் கோரியுள்ளேன்.

ஆனால், ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்தப் பூங்காவில் எங்களை மிரட்டி, பயப்பட வைத்ததற்காக, அனில் ரெட்டி மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.

உலகில் யாருக்கும் நம்மைப் பயமுறுத்தும் உரிமை இல்லை. அதை இனிமேலும் சகிக்க முடியாது. மீண்டும் உங்கள் அனைவரின் ஆதரவுக்கு, எனது வழக்கறிஞர்களுக்கு என் நன்றி மற்றும் அன்பு. குறிப்பிட்டு நான் இருவரைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் இந்தப் பிரச்சினை முழுவதிலும் எனக்கு ஆதரவளித்தனர். அது, எனக்கு ஆலோசனைகள், மன ரீதியான ஆதரவு அளித்த ஷ்ரத்தா மற்றும் என் பக்கம் உறுதுணையாக இருந்த பவன். உங்களை நான் நேசிக்கிறேன், நீங்களின்றி என்னால் இதைச் செய்திருக்க முடியாது.

கடைசியாக, ஆனால் முக்கியமாக எனக்குப் பக்கபலமாக இருந்த என் குடும்பத்துக்கு நன்றி. உணர்வுரீதியாக எனக்கு ஆதரவளித்தனர். என்ன நடந்தாலும் என் பக்கத்தில் இருப்பேன் என்று உறுதியளித்தனர். ஒரு பெண்ணாக அது முக்கியமான ஆதரவு என நான் நினைக்கிறேன்".

இவ்வாறு சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x