Last Updated : 31 Aug, 2020 08:51 PM

 

Published : 31 Aug 2020 08:51 PM
Last Updated : 31 Aug 2020 08:51 PM

சுஷாந்த் தற்கொலை சர்ச்சை: ரியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் லட்சுமி மஞ்சு, டாப்ஸி

ஹைதராபாத்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபர்த்தி பற்றி ஊடகங்கள் தீர்ப்பு வழங்குவது குறித்து நடிகைகள் லட்சுமி மஞ்சுவும், டாப்ஸியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என்று கூறப்பட்டாலும், ரியா சக்ரபர்த்தியும் அவரது குடும்பத்தினரும் தான் தனது மகனின் மரணத்துக்குக் காரணம் என்று சுஷாந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த வழக்கு தீவிரம் பெற்று சிபிஐ விசாரித்து வருகிறது. ரியா மற்றும் அவரது குடும்பத்தினரைத் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து கேள்விகள் கேட்டு வருகிறது.

இந்நிலையில் சில செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ரியாவே எல்லாவற்றுக்கும் காரணம் என அவர் மீது குற்றம்சாட்டி பலர் பதிவிட்டு வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் சிலரும் கூட இதில் அடக்கம். இந்நிலையில் ரியாவுக்கு ஆதரவாக நடிகை லட்சுமி மஞ்சு பதிவிட்டுள்ளார்.

"ரியா சக்ரபர்த்தியின் பேட்டியை முழுமையாகப் பார்த்தேன். இது குறித்து நான் பேச வேண்டுமா வேண்டாமா என்று நிறைய யோசித்தேன். அந்தப் பெண்ணை அரக்கி போல ஊடகங்கள் சித்தரித்துள்ளன. இதனால் பலர் மவுனம் காப்பதைப் பார்த்தேன். எனக்கு நடந்த உண்மை என்னவென்று தெரியாது. தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நேர்மையான வழியில் உண்மை வெளியே வருமென்று நான் நம்புகிறேன்.

எனக்கு நம் நாட்டின் நீதி அமைப்பின் மீதும், சுஷாந்துக்கு நீதி பெற முயற்சித்து வரும் அமைப்புகள் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. ஆனால் அது வரை, உண்மை என்னவென்று தெரியாமல் ஒரு நபரையும், அவரது குடும்பத்தையும் தாக்கி, அவர்களுக்குத் தீமையும், கொடுமையும் செய்யாமல் இருப்போமா.

ஊடகங்களின் இந்த விசாரணைகளால் அந்த மொத்தக் குடும்பமும் எது போன்ற வலியை அனுபவிக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. எனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால் என் சக ஊழியர்கள் எனக்காக ஆதரவு தர வேண்டும், குறைந்தது என்னைப் பற்றித் தெரிந்தவர்கள் எனக்காகப் பேச வேண்டும், அவளைத் தனியாக விடுங்கள் என்று சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பேன்.

அதேதான் நான் இப்போது உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பின்வாங்குங்கள். அவரைத் தனியாக விடுங்கள். உண்மை அதிகாரப்பூர்வமாக வெளியே வரும் வரை காத்திருங்கள். நாம் எப்படி மாறியிருக்கிறோம் என்பதைப் பார்க்க எனக்கு வேதனையாக இருக்கிறது.

நமக்கு ஒரு குரல் இருக்கும் போது, மனம் விட்டுப் பேச முடியாமல் போனால் நாம் எப்படி உண்மையாக இருப்பதாகக் கூறிக் கொள்ள முடியும். நான் என் சக ஊழியருக்கு ஆதரவு தருகிறேன்" என்று லட்சுமி மஞ்சு பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைப் பகிர்ந்திருக்கும் நடிகை டாப்ஸி, "எனக்குத் தனிப்பட்ட முறையில் சுஷாந்தையோ, ரியாவையோ தெரியாது. ஆனால் நீதி அமைப்பைத் தாண்டி, குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத ஒருவரைக் குற்றம்சாட்டுவது எவ்வளவு தவறு என்பது எனக்குத் தெரியும். இதைப் புரிந்து கொள்ள மனிதம் இருந்தால் போதும். உங்களின் நல்லறிவுக்காகவும், இறந்தவரின் கண்ணியத்துக்காகவும் உங்கள் நாட்டின் சட்டத்தை நம்புங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x