Last Updated : 26 Aug, 2020 05:07 PM

 

Published : 26 Aug 2020 05:07 PM
Last Updated : 26 Aug 2020 05:07 PM

சிவாஜி - டி.எம்.எஸ். ஜோடி இணைந்து 66 ஆண்டுகள்; ’தூக்குதூக்கி’யில் இருந்து ‘டேக் ஆஃப்’

நடிகர்திலகம் சிவாஜியின் படங்களுக்கு எத்தனையோ பேர் இசையமைத்திருக்கிறார்கள். அந்த இசை அமர்க்களமாகப் பொருந்திவிடும். எத்தனையோ பேர் தயாரித்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் இயக்கியிருக்கிறார்கள். உடன் எத்தனையோ பேர் நடித்திருக்கிறார்கள். ஆனால், எத்தனை பாடகர்கள் இருந்தாலும் சிவாஜிக்கு மிக அழகாகப் பொருந்தியது அந்தக் குரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்... டி.எம்.எஸ்.

எம்ஜிஆரும் சிவாஜியும் அந்தக் கால ஜாம்பவான்கள். சூப்பர் ஸ்டார்கள். இந்த இரண்டுபேருக்குமே டி.எம்.எஸ். குரல் அப்படி பாந்தமாகப் பொருந்தியது. எம்ஜிஆர் பாட்டுக்கு ஒரு ‘ஸ்கேல்’ வைத்திருப்பார். சிவாஜிக்குப் பாடும்போது ஒரு ‘ஸ்கேல்’ வைத்துப் பாடுவார். பல தருணங்களில், ‘பாடுவது டி.எம்.எஸ்.ஸா, சிவாஜியா’ என்று யோசிக்கும் அளவுக்கு, வியக்கும் அளவுக்கு குரல் அட்டகாசமாகப் பொருந்தியிருக்கும்.

சிவாஜி கணேசனுக்கு ஆரம்பகாலத்தில் சி.எஸ்.ஜெயராமன் பாடுவார். அந்தக் குரலும் தனித்துவம் மிக்கதுதான். சிவாஜியின் குரலுக்கும் ஜெயராமன் குரலுக்கும் அழகாகக் பொருந்திப் போகும்.

1952ம் ஆண்டு ‘பராசக்தி’யில் இருந்து சிவாஜி நடித்த படங்கள் வரத்தொடங்கின. அதையடுத்து வரிசையாகப் படங்கள் வந்தாலும் டி.எம்.எஸ். பாடவில்லை. சுந்தர்ராவ் நட்கர்னியின் ‘கிருஷ்ண விஜயம்’ படம் 1950ம் ஆண்டு வெளியானது. இதில் ‘ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி’ என்ற பாடலைப் பாடி தமிழ்த் திரையுலகுக்கு வந்தார் டி.எம்.எஸ். அதன் பிறகுதான், 52ம் ஆண்டு சிவாஜி ‘பராசக்தி’யின் மூலம் நடிக்க வந்தார்.

52ம் ஆண்டில் இருந்து 54ம் ஆண்டு வரை, சிவாஜிக்கு சி.எஸ்.ஜெயராமன் முதலான பாடகர்கள் பாடினார்கள். இதில் சி.எஸ்.ஜெயராமன் பாடினார். ஆர்.எம்.கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் சிவாஜி, பத்மினி, லலிதா, ராகினி, பாலையா முதலானோர் நடித்தார்கள். இந்தப் படத்துக்கு இசைமேதை ஜி.ராமநாதன் இசையமைத்தார். இவர் அந்தக் கால எம்.எஸ்.வி. இளையராஜா. போட்ட டியூனெல்லாம் ஹிட்டாகும் .

‘தூக்கு தூக்கி’ படத்துக்கு சிவாஜிக்கு ஏகப்பட்ட பாடல்கள். இந்த சமயத்தில், டி.எம்.எஸ். குரல், ஜி.ராமநாதனுக்கு பிடித்துப் போகவே, ‘தூக்கு தூக்கி’ படத்தில் ஒரு பாடலாவது பாடுவதற்கு வாய்ப்புக் கொடுக்க முடிவு செய்தார். ஆனால் சிவாஜிக்கோ இஷ்டமில்லை. ‘ஜெயராமன் அண்ணனையே போடுங்களேன்’ என்று வலியுறுத்தினார்.

ஆனால், ‘ஒரெயொரு பாட்டுதான். செளந்தர்ராஜனுக்குக் கொடுப்போம். பிடிச்சிருந்தா பாருங்க. இல்லேன்னா, ஜெயராமனைப் பாடவைச்சு, ரிக்கார்டிங் பண்ணிக்கலாம்’ என்று இசையமைப்பாளரும் சொல்ல, இயக்குநரும் சம்மதிக்க, வேறுவழியின்றி, வேண்டாவெறுப்பாக சிவாஜியும் சரியென்றார்.

செளந்தர்ராஜன் பாடினார். பதிவு செய்யப்பட்டது. சிவாஜியை அழைத்தார்கள். பாடலைக் கேட்டார் சிவாஜி. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். ‘நல்லாருக்கே... இவரையே எல்லாப் பாட்டையும் பாடவைச்சிருங்க’ என்றார் சிவாஜி. இயக்குநர் ஒத்துக்கொண்டார். ஜி.ராமநாதனின் இசையில், சிவாஜிக்காக எல்லாப் பாடல்களையும் பாடினார் டி.எம்.எஸ். படம் வெளியானது. ரசிகர்கள் பாடல்களைக் கேட்டு, கிறங்கிப் போனார்கள். ‘சிவாஜியே பாடிருக்கார் போலப்பா’ என்றார்கள். ‘இல்லப்பா, யாரோ மதுரைக்காரராம்’ என்றார்கள். ‘செளந்தர்ராஜன்னு பாடகருப்பா’ என்று விவரம் சொல்லிப் பேசிக்கொண்டார்கள். பாராட்டினார்கள்.

அதன் பிறகு அடுத்தடுத்து வந்த படங்களில், தயாரிப்பாளர்கள் மாறினார்கள். இயக்குநர்கள் மாறினார்கள். இசையமைப்பாளர்கள் கூட மாறி மாறி வந்தார்கள். ஆனால், சிவாஜி படத்துக்கு, அவருக்கு டி.எம்.எஸ். என்பது பெரும்பாலும் உறுதியாயிற்று. ‘சிவாஜி - டி.எம்.எஸ். ஜோடி’ ரசிக்கப்பட்டது. ஹிட்டானது.

ஐம்பதுகளில் தொடங்கிய சிவாஜி - டி.எம்.எஸ். கூட்டணி, அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கூட சூப்பர் கூட்டணியாக கோலோச்சியது. ‘முல்லை மலர் மேலே’, ‘யாரை நம்பி நான் பொறந்தேன்’, ‘பூமாலையில் ஓர் மல்லிகை’, ‘அந்தநாள் ஞாபகம்’, ‘சிந்தனை செய் மனமே’, ‘யாருக்காக’, ‘எண்ணிரண்டு பதினாறுவயது’, ‘வேலாலே விழிகள்’, ‘மயக்கம் எனது தாயகம்’, ‘யார் அந்த நிலவு’, ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ என்பன உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாடல்கள், சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடி, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி’யில் ‘நிகழும் பார்த்திபன் ஆண்டு...’எனும் வசனத்தை சிவாஜியே பேசுவது போல் பாடியிருப்பார். இப்படி ஏராள சோறுபதங்கள் உண்டு.

இந்த நீண்ட நெடிய குரல் பயணத்துக்கு அச்சாரம் போட்டதுதான் ‘தூக்குதூக்கி’. ‘பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை நம்பாதே’, ’ஏறாத மலைதனிலே’, ’கண்வழி புகுந்து கருத்தினில் நிறைந்து’, ’குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’, ’அபாய அறிவிப்பு ஐயா அபாய அறிவிப்பு’, ’சுந்தரி செளந்தரி நிரந்தரியே’ என்று ‘தூக்குதூக்கி’யில் சிவாஜிக்கு டி.எம்.எஸ். பாடிய பாடல்கள், இன்றைக்கும் ஹிட் லிஸ்ட் வரிசையில் இருக்கின்றன.

தமிழ் சினிமாவின் அட்டகாச கூட்டணியான சிவாஜி - டி.எம்.எஸ். முதன்முதலாக இணைந்த ‘தூக்கு தூக்கி’, 1954ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி வெளியானது. ஆக, சிவாஜிக்கு குரல் கொடுத்த டி.எம்.எஸ்., அவரின் குரலுக்கு தகுந்தது போல் நடித்த சிவாஜி... இருவரும் இணைந்து 66 ஆண்டுகளாகின்றன.

குரல் வழியே நம்மைக் குளிர்வித்த டி.எம்.செளந்தர்ராஜனையும் நடிப்பாலும் பாட்டசைவாலும் அசத்திய சிவாஜிகணேசனையும்... அந்த இரண்டு மகா கலைஞர்களையும் போற்றுவோம். நினைவுகூர்வோம்!


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x