Published : 26 Aug 2020 04:01 PM
Last Updated : 26 Aug 2020 04:01 PM

முரளியின் இளைய மகன் ஆகாஷ் - இயக்குநர் சிநேகா பிரிட்டோ திருமணம்: ஆக.24-ம் தேதி நடந்தது

சென்னை

முரளியின் இளைய மகன் ஆகாஷுக்கும் இயக்குநர் சிநேகா பிரிட்டோவுக்கும் ஆகஸ்ட் 24-ம் தேதி திருமணம் நடந்தது.

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ், இயக்குநர் சிநேகா பிரிட்டோ இருவருமே கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து காதலித்து வந்தார்கள். தற்போது ஆகாஷ் சினிமாவில் நாயகனாக நடிக்க முயன்று வருகிறார்.

சிநேகா பிரிட்டோ இயக்குநராகி 'சட்டம் ஒரு இருட்டறை 2' என்னும் படத்தை இயக்கினார். இவர் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் ஆவார். சேவியர் பிரிட்டோ மிகப்பெரிய தொழிலதிபர். ஆகாஷ் - சிநேகா பிரிட்டோ இருவரின் திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. குடும்ப உறவுகள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்க, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

இது தொடர்பாக அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இருவரும் இணைந்து கூறியதாவது:

"நாங்கள் மனம் நிறைந்த மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் இல்லத் திருமண நிகழ்வு அனைவரின் ஆசீர்வாதத்திலும் நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள் சூழ, இனிதாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வை இன்னும் பிரம்மாண்டமாக காலத்தின் மறக்க முடியாத, இரு குடும்பங்களின் கொண்டாட்ட நிகழ்வாக உங்கள் எல்லோரையும் அழைத்து நடத்தவே ஆசைப்பட்டோம்.

ஆனால், தற்போதைய சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்ப சொந்தங்கள் மட்டுமே, பங்கேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், மிக விரைவில் நிலைமை சரியானவுடனே திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரம்மாண்ட வரவேற்பு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம்".

இவ்வாறு அதர்வா முரளியும், சேவியர் பிரிட்டோவும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x