Published : 26 Aug 2020 02:23 PM
Last Updated : 26 Aug 2020 02:23 PM

தனிநபர் தாக்குதல் வேண்டாம்; மனம் வலிக்கிறது: 'சூரரைப் போற்று' ஓடிடி வெளியீடு தொடர்பாக பாரதிராஜா வேண்டுகோள்

சென்னை

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பலரும் சூர்யா நடிக்கும் படங்களுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி, கடுமையாக உழைக்கிறார்கள்.ஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்தத் தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதில் உள்ள பிரச்சினைகளைப் பட்டியலிடத் தேவையில்லை.

மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்ததுதான் மிச்சம். எல்லாவற்றுக்கும் நாம்தான் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான்.

பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்த மாற்று வழிதான் ஓடிடி. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இதுபோன்ற மாற்றுத்தளங்களைத் தவிர்க்க முடியாது. வேண்டாம் என்றாலும் காலப் போக்கில் நாமும் அந்த இடத்துக்குத் தள்ளப்படுவோம். இதற்கு நாம் கடந்த காலங்களில் Video piracy க்கு எதிரான போராட்டம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதிரான போராட்டம், கேபிள் டிவிக்கு எதிரான போராட்டம், DTH- க்கு எதிரான போராட்டம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இறுதியில் எல்லாவற்றையும் பின்வாசல் வழியே நாம் வரவேற்றுக் கொண்டதே நிதர்சனம். என் பார்வையில் தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சினை தியேட்டரில் டிக்கெட் விலையை விட பாப்கார்ன், பார்க்கிங் விலை அதிகம். ஒரு சாமானிய மனிதன் எப்படி ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து குடும்பத்தோடு தியேட்டருக்கு வர முடியும்?

அதனால்தான் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதள அயோக்கியர்களை நோக்கி மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்தக் கரோனா காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெப்சி தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருமே ஐந்து மாதமாக வேலையின்றி எவ்வளவு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்பதை அனைவரும் அறிவோம்.

இப்பொழுதுதான் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளது. தியேட்டரைத் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்துவிட்டு விரைவில் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டரைத் திறக்க அனுமதி அளிப்பார் என்று நம்புகிறோம். ஆனால், அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்நோக்க இருக்கும் சில பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பது நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

குறிப்பாக, மக்கள் நலனில் அக்கறைகொண்டு தியேட்டரில் 35 சதவீதம் முதல் 50 சதவீதத்துக்குள் சமூக இடைவெளியுடன் தியேட்டரில் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் என அறிகிறோம். 50 சதவீதம் மக்களை அனுமதித்தால் கூட ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனை வாரங்கள் திரையிடப்படும்?

ஏற்கெனவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை, அப்படியே தியேட்டர் கிடைத்தாலும் முதல் இரண்டு வாரத்திலேயே தூக்கிவிடுவார்கள். அதே நிலையில் இன்றைய சூழ்நிலையில் படங்கள் வெளியிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடித்துப் போவார்கள். குறைந்தது ஒரு திரைப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் தியேட்டரில் திரையிடப்பட வேண்டும்.

பிறகு தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளருக்கும் டிக்கெட் விலையில் உள்ள சதவீதம் இன்றைய சூழ்நிலையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்களின் எங்களது நீண்டநாள் கோரிக்கையான VPF (virtual print fee) தொகை திரைப்படம் வெளியிடும் சமயத்தில் பெருஞ்சுமையாக இருக்கிறது.

இதை vpf சேவை வழங்கும் நிறுவனங்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பேசித் தீர்த்துக்கொண்டு எங்களுக்கான சுமையைக் கருத்தில் கொண்டு முன்வர வேண்டும். தயாரிப்பாளர்களின் மற்றொரு கோரிக்கையான டிக்கெட் விற்பனையை தயாரிப்பாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் தியேட்டர் டிக்கெட் விற்பனையை இணையதளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும். எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வராமல் பல திரைப்படங்கள் முடக்கப்பட்டு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்தால்தான் அடுத்தடுத்து அந்தத் தயாரிப்பாளர் படம் எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள், நாமும் நன்றாக இருப்போம். ஆகையால், தமிழ்த் திரைத்துறை நலிந்து கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும், உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.

தயாரிப்பாளர்கள் வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே சரியாக இருக்கும். பிரச்சினைகள் இப்படி இருக்க அதை விடுத்து, பிரச்சினையை வேறுபக்கம் திருப்புவது சரியாகத் தோன்றவில்லை. சமீபநாட்களில் ஓடிடிக்கு எதிரான பிரச்சினையை, சூர்யாவுக்கு எதிரான தனிநபர் பிரச்சினையாகத் திசை திருப்பி விடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.

இதன் பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன்; நீங்களும் அறிவீர்கள். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒரு சிலரே. அதில் சூர்யாவும் குறிப்பிடத்தகுந்தவர். சூர்யா மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வரக்கூடாது, திரையில்தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்கக்கூடிய ஒன்றுதான்.

அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதைத் திரையில் கொண்டுவர முன்வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில் சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது. என் நண்பர் சிவகுமாரின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்துக் கர்வப்பட்டுள்ளேன். சூர்யா, கார்த்தி இருவரும் என்வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள். அவர்களின் மனிதநேயப் பண்பும், நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன். இவர்கள் தமிழ்த் திரைக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். பெருமைப்படுங்கள்.

இவர்களை மட்டுமில்லை எந்தவொரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம் வலிக்கிறது. இனி தனிநபர் தாக்குதல் வேண்டாம். தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான், இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே வாருங்கள், பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம். கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணத்தில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கக் கூடியதாகும்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மிரட்டியுள்ள 'சூரரைப் போற்று' திரை முன்னோட்டம் பார்த்து வியந்தேன். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 'சூரரைப்போற்று' முத்திரை பதிக்கும்; தமிழனைப் போற்றும்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x