Published : 22 Aug 2020 09:11 PM
Last Updated : 22 Aug 2020 09:11 PM

ஓடிடி தளத்தில் வெளியாகுமா 'மாஸ்டர்'? - படக்குழு பதில்

சென்னை

'மாஸ்டர்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் ஏப்ரல் 9-ம் தேதியே படம் வெளியாகி இருக்கும். தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 22) காலை 'சூரரைப் போற்று' படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனால் 'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் பரவியது.

'சூரரைப் போற்று' படத்தைப் போலவே 'மாஸ்டர்' படமும் ஓடிடியில் வெளியாவதற்கான சாத்தியம் உள்ளதா என்று படக்குழு தரப்பில் விசாரித்தோம்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

"கண்டிப்பாக 'மாஸ்டர்' வெளியீடு திரையரங்கில் மட்டுமே. ஓடிடி தளத்தில் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்புதான் வெளியாகும். இதுவரை ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்று யாரிடமும் நாங்கள் பேசவில்லை.

ஓடிடி தளங்கள் ஆர்வமுடன் எங்களிடம் பேசியது உண்மை. அதற்கு நாங்கள் வாய்ப்பில்லை எனத் தெரிவித்துவிட்டோம். எங்களுடைய படத்தைத் திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதுதான் எண்ணம். ரசிகர்களுக்கான கொண்டாட்டமான படம்தான் 'மாஸ்டர்'.

தீபாவளி வெளியீட்டுக்கு முதலில் திட்டமிட்டோம். ஆனால், இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டால் மக்கள் கூட்டம் வருமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஆகையால், பொங்கல் வெளியீடு என மாற்றியிருக்கிறோம். அதுவரைக்கும் இந்தக் கரோனா அச்சுறுத்தல் நீடிக்காது என உறுதியாக நம்புகிறோம்".

இவ்வாறு 'மாஸ்டர்' படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x