Published : 21 Aug 2020 07:07 PM
Last Updated : 21 Aug 2020 07:07 PM

அப்பா உடலின் அடிப்படை செயல்பாடுகள் ஒழுங்காக உள்ளன: எஸ்.பி.சரண்

சென்னை

அப்பா உடலின் அடிப்படை செயல்பாடுகள் ஒழுங்காக உள்ளன என்று எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம்பெற வேண்டி நேற்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டுப் பிரார்த்தனைச் செய்தனர். இதில் பாரதிராஜா, ரஜினி, கமல், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான முன்னெடுப்பை இயக்குநர் பாரதிராஜா செய்திருந்தார்.

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 21) மருத்துவமனை அறிக்கையில் எஸ்.பி.பி உடல்நிலை சீராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தற்போது தனது தந்தையின் உடல்நலம் குறித்து எஸ்.பி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:

"அப்பா நிலையாக இருக்கிறார் என்ற வார்த்தையை மருத்துவமனை இன்று பயன்படுத்தியுள்ளது. நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் குழு கூறியிருந்தது. மருத்துவமனையின் இன்றைய அறிக்கை அவர் நிலையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

கவலைக்கிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. ஆனாலும் இதற்கு அவர் முழுமையாகக் குணமாகிவிட்டார் என்று அர்த்தமல்ல. இதற்கு அர்த்தம், அவர் உடல்நிலையில் இப்போதைக்குச் சிக்கல்கள் இல்லை, உடலின் அடிப்படை செயல்பாடுகள் ஒழுங்காக உள்ளன.

முன்னரே நாங்கள் குறிப்பிட்டது போல மருத்துவக் குழு மீதும், எங்களுக்காக வரும் பிரார்த்தனைகள் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் நிலையாக இருக்கிறார் என்று இன்று சொல்லப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி.

அப்பாவுக்காகவும், குடும்பத்துக்காகவும் பிரார்த்தனைகள், அன்பு, அக்கறை காட்டும் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன். மீண்டு வரும் நீண்ட பயணம் உள்ளது. ஆனால் கண்டிப்பாக மீண்டு வரும் பயணம். அனைவருக்கும் மீண்டும் நன்றி"

இவ்வாறு எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x