Published : 20 Aug 2020 04:36 PM
Last Updated : 20 Aug 2020 04:36 PM

எழுந்து வா பாலண்ணா: ராசி அழகப்பன் கவிதை

சென்னை

எஸ்.பி.பி பூரண நலம்பெற வேண்டி, இயக்குநர் ராசி அழகப்பன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம்பெற வேண்டி இன்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாரதிராஜா, இதில் ரஜினி, கமல், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், பல்வேறு பிரபலங்கள் எஸ்.பி.பி பூரண நலம்பெற வேண்டி அறிக்கைகள், வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் ராசி அழகப்பன், 'எழுந்து வா பாலண்ணா' என்று கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அது பின்வருமாறு:

இரவென்ன செய்யும்
பகலெங்கு போகும்
செவியென்ன கேட்கும்
உன் பாடல் அன்றி !?

ஆயிரம் நிலவுகள்
உன்குரல் தேடி
திசையெட்டும் சென்று
மழலை போல் நிற்கும்.

காற்றுக்குள் நீ சேர்த்த
சொற்கூட்டமெல்லாம்
புதுப்பாடல் கேட்க
பசியோடு நிற்கும்.

ஓசைக்கு ஆசை வந்த
அழகன் நீ!
ஸ்ருதிக்கு சுவை கூட்ட
வந்தவன் நீ!

சொல்லுக்கு சுவாசத்தை
தந்தவன் நீ!
ஓங்காரப் பெருவெளியின்
அதிசயன் நீ!

ஒளிக்கீற்று வியாசனே
கை நீட்டி வா!
காலத்தை வென்றிடவே
விரைவாக வா!

ராஜாக்கள் கை கூப்பி
அழைக்கின்றார் வா அண்ணா!
ரசித்தவர்கள் அழுதபடி
தொழுகின்றார் வா அண்ணா !

பாலண்ணா !
எழுந்து வா அண்ணா!
எம்மா பாரண்ணா!!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x