

எக்மோ உதவியுடன் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 19) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டு எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள், தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவர் வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) மற்றும் எக்மோ (ECMO) கருவிகள் உதவியுடன் இருந்து வருகிறார்.
அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை இந்த நேரம் வரை திருப்திகரமான நிலையில் உள்ளது"
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.