Published : 18 Aug 2020 01:44 PM
Last Updated : 18 Aug 2020 01:44 PM

டேய் எஸ்.பி. பாலு எழுந்து வாடா; வந்துருடா: காணொலியில் பாரதிராஜா கண்ணீர்

சென்னை

டேய் எஸ்.பி. பாலு எழுந்து வாடா; வந்துருடா என்று பாரதிராஜா வெளியிட்ட வீடியோவில் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து எஸ்.பி.சரண் வீடியோ வழியே தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 17) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி இன்னும் செயற்கை சுவாச உதவியோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக தெரிவித்தது.

எஸ்.பி.பி பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் எஸ்.பி.பியின் நெருங்கிய நண்பரான பாரதிராஜா வெளியிட்ட வீடியோவில் கண்ணீருடன் பேசியிருப்பதாவது:

"என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய பாலு, டேய் எஸ்.பி. பாலு எழுந்து வாடா. வாடா என்ற உரிமையை நீ எனக்கும், நான் உனக்கும் கொடுத்து 50 ஆண்டுக்காலம் ஆகிறது. பள்ளி நாட்களில் கூட நண்பர்களுடன் நான் இந்தளவுக்கு பழகியதில்லை.

எனக்கு இன்றும் நல்ல ஞாபகம் இருக்கிறது. 'ஆயிரம் நிலவே வா' உனது முதல் பாடல். நீ உச்சத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து கொண்டிருக்கிறாய். சிதம்பரம், வேலூர் என எங்கு எம்.எஸ்.வி கச்சேரி என்றாலும் உன்னுடைய பியட் காரில் தான் செல்வாய். அதற்கு டிரைவர் இல்லாமல் நீ தான் ஓட்டிக் கொண்டு போவாய். கூட நானும் வருவேன். ஏனென்றால் உனக்கு தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கதை சொல்லிக் கொண்டே நானும் வருவேன்.

உன்னிடம் ஒரு நாள் கே.விஸ்வநாத்திடம் என்னை உதவியாளனாக சேர்த்துவிடுடா என்று சொன்னேன். அப்போது நான் உதவி இயக்குநர் இல்லை. கதை வைத்திருக்கிறாயா என்ற கேட்டாய், ஆமாம் என்றவுடன் வேறு ஐடியா இருக்கிறது என்றாய். என்ன என்றவுடன் NFDC என ஒன்று உண்டு. ஒன்றரை லட்ச ரூபாயில் படம் எடுக்கலாம். அப்படியொரு திட்டம் இருக்கிறது என்று சொன்னாய்.

எனக்கு இப்போதும் நல்ல ஞாபகம் இருக்கிறது. பிரசாத் ஸ்டூடியோவில் ரெக்காடிங் தியேட்டருக்கு வெளியே புல்வெளியில் 'மயில்' என்ற கதையை உனக்குச் சொன்னேன். உனக்கு கதைப் பிடித்திருக்கிறது. 5000 ரூபாய் ஆரம்பச் செலவுக்கு எனக்குக் கொடுத்தாய். அப்போது தான் உனக்கு பல்லவி பிறந்திருக்கிறாள். நான் முதலில் பல்லவி புரொடக்‌ஷன்ஸ் என்று உன் மகளின் பெயரில் தான் ஆரம்பிக்கிறேன். சில காரணங்களால் அது நின்றுவிட்டது.

அதற்குப் பிறகு தொடர்ந்து நீயும், நானும் நட்பை வளர்ந்துக் கொண்டிருக்கிறோம். ஒரு முறை உனக்கு ஞாபகம் இருக்கிறதா.. கச்சேரிக்காக இளையராஜா, நான், பாஸ்கர் எல்லாம் போயிருந்தோம். உங்கள் வீடு ஆச்சாரமான வீடு. அங்குச் சாப்பிட்டோம். இரவு எங்களுக்கு சில பலவீனங்கள் உண்டு. "டேய்.. இது ஆச்சாரமான வீடு.. உதைத்துவிடுவேன் என்று எங்கள் கையில் காசு கொடுத்து சில இடங்களைச் சொல்லி அங்கு போங்கடா" என்று சொல்லிவிட்டாய். உன் வீட்டு உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறோம். அதுமட்டுமல்லடா.. எப்படிடா எங்களை விட்டுப் போக உனக்கு மனசு வரும். வராது. நீ திரும்ப வந்துருவ, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.

அதற்குப் பிறகு '16 வயதினிலே' பூஜை. அந்தப் பூஜைக்கு நீ தான் பாடவேண்டும் என்று சொன்னேன். நீயும் தயாராகிறாய். ஆனால், பூஜை அன்று உனக்கு தொண்டை சரியில்லை. மன்னிக்கணும் என்று சொல்லிவிட்டாய். இல்லையென்றால் 'செவ்வந்தி பூ முடிச்ச' பாட்டை நீ பாடியிருப்பாய். உன்னுடைய இடத்தில் மலேசிய வாசுதேவனை வைத்துப் பாடவைச்சேன்.

இதற்குப் பின்னால் 'நிழல்கள்' படத்தில் 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாடல் பாடினாய். இன்றளவும் உலகமே வியந்து கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு பாடல். நீ பொன்மாலைப் பொழுது பாடலாம், ஆனால் உனக்கு பொன்மாலைப் பொழுது வரக்கூடாது. உனக்கு பொன்காலைப் பொழுது தான் வரவேண்டும்.

பாலு நான் மட்டுமில்லடா. உலகத்திலுள்ள அத்தனை கலைஞர்களும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம். இரண்டு நாட்களாக நான் விட்டக் கண்ணீர் என் கன்னங்களில் வழியும் போது, அதை துடைத்து துடைத்து எறிந்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவில் கூட கண்ணீர் வந்துவிடக் கூடாது என்று நிதானமாகப் பேச முயற்சிக்கிறேன்.

பாலு வந்துருவடா.. நான் வணங்குகின்ற பஞ்ச பூதங்கள் அத்தனையும் உண்மையென்றால் நீ மறுபடியும் வருகிறாய், எங்களோடு பழகுகிறாய். இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடுகிறாய். நீ ஒரு ஆண் குயில். வந்துருடா பாலு!"

இவ்வாறு பாரதிராஜா கண்ணீருடன் முடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x