Published : 15 Aug 2020 12:14 PM
Last Updated : 15 Aug 2020 12:14 PM

விஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்

சென்னை

விஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை என்று லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் ஏப்ரல் 9-ம் தேதி படம் வெளியாகி இருக்கும். தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' ஆகஸ்ட் 12-ம் தேதி டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக அளித்துள்ள பேட்டியில் 'மாஸ்டர்' வாய்ப்பு குறித்துப் பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"முதலில் விஜய் சாரை சந்தித்துக் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்த போது சற்று பதட்டமாக இருந்தது. ஆனால் இரண்டு மூன்று சந்திப்புகளுக்குப் பிறகு, படம் எடுக்கப் போகிறோம் என்பது உறுதியான பிறகு, முன் தயாரிப்பு வேலைகள் நடந்த சமயத்தில் அவரோட நன்றாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு அவர் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை. இவரா நான் கல்லூரி நாட்களிலிருந்து திரையில் பார்த்து வியந்தது என்று நினைத்தேன். அந்த அளவு இனிமையாக, எளிமையாகப் பழகினார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் சவுகரியமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வார்.

எனவே அழுத்தத்தை நான் உணரவே இல்லை. முதல் நாள் படப்பிடிப்பு கூட அழுத்தமின்றியே இருந்தது. அன்றிலிருந்து 129 நாட்களும் அப்படியே இருந்தன. அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தோம். விஜய் மிக எளிமையாக, பணிவாக இருப்பது தான் அவர் இவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பதற்குக் காரணங்கள்"

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x