Published : 12 Aug 2020 01:58 PM
Last Updated : 12 Aug 2020 01:58 PM

சஞ்சய் தத் உடல்நிலை: மான்யதா தத் வேண்டுகோள்

சஞ்சய் தத் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மனைவி மான்யதா தத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 9-ம் தேதி சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு உடல்நிலை சீராகி ஆகஸ்ட் 10-ம் தேதி வீட்டிற்கு திரும்பினார்.

நேற்று (ஆகஸ்ட் 11) மாலை திடீரென்று மருத்துவ காரணங்களுக்காகத் திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சஞ்சய் தத் அறிவித்தார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்த சில மணித்துளிகளில் சஞ்சய் தத்துக்கு 3-ம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்றும், இதன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பலரும் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டு வந்தாலும், சஞ்சய் தத் குடும்பத்தினரிடமிருந்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே, சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சஞ்சு விரைவாகக் குணமடைய வாழ்த்திய அனைவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கட்டத்தைக் கடக்க எங்களுக்கு வலிமையும் பிரார்த்தனைகளும் தேவை. எங்கள் குடும்பம் பல கஷ்டங்களைக் கடந்த காலங்களில் சந்தித்துள்ளது. ஆனால் இதுவும் கடந்து போகும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

எதுவாயினும், ஆதாரமற்ற வதந்திகளை, ஊகங்களையும் ரசிகர்கள் நம்பவேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மாறாக எங்களுக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் அளித்து உதவுங்கள். சஞ்சு எப்போதும் ஒரு போராளியாகவே இருந்து வந்துள்ளார், எங்கள் குடும்பமும்தான். எதிர்வர இருக்கும் சவால்களைக் கடக்க கடவுள் எங்களை மீண்டும் சோதிப்பதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

எங்களுக்கு வேண்டியதெல்லாம் உங்கள் பிரார்த்தனைகளும் ஆசிகளும் தான். எப்போதும் போல இதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை நாங்கள் அறிவோம். ஒளியையும், நேர்மறையையும் பரப்ப இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்"

இவ்வாறு மான்யதா தத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x