Published : 11 Aug 2020 10:22 PM
Last Updated : 11 Aug 2020 10:22 PM

'லூசிஃபர்' ரீமேக் ஒத்திவைப்பு? - வேகமெடுக்கும் 'வேதாளம்' ரீமேக் பணிகள்

'லூசிஃபர்' ரீமேக்கிற்கு முன்பாக 'வேதாளம்' ரீமேக்கை தொடங்கவே சிரஞ்சீவி முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. ராம்சரண் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பிறகே படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இதனிடையே, 'ஆச்சாரியா' படத்துக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கவுள்ள படம் என்ன என்பது இப்போது வரை உறுதியாகவில்லை. ஆனால் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'லூசிஃபர்' மற்றும் தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'வேதாளம்' ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக்கை உரிமையை சிரஞ்சீவி நடிப்பதற்காக வாங்கி வைத்துள்ளனர்.

முதலில் 'லூசிஃபர்' ரீமேக்கை 'சாஹோ' இயக்குநர் சுஜீத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் ரீமேக்கிற்காக சுஜீத் செய்த மாற்றங்கள் சிரஞ்சீவிக்குப் பிடிக்கவில்லை என்பதால், அவர் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். விரைவில் வி.வி.விநாயக் இயக்குநராக பொறுப்பேற்பார் எனத் தகவல் வெளியானது.

இதனிடையே 'வேதாளம்' ரீமேக் பணிகள் சுறுசுறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது. மெஹர் ரமேஷ் இயக்க, அனில் சுக்ரா - ராம்சரண் - ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இதில் சிரஞ்சீவியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

'வேதாளம்' ரீமேக் பணிகள் தீவிரமாகி உள்ளதால், 'லூசிஃபர்' ரீமேக் பணிகளைத் தள்ளிவைத்துவிட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதி சிரஞ்சீவி பிறந்த நாளன்று 'வேதாளம்' ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே வெளியாகவுள்ளது. அந்தப் படத்தை முடித்துவிட்டே 'லூசிஃபர்' ரீமேக் பணிகளை சிரஞ்சீவி துவங்குவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x