Published : 09 Aug 2020 02:58 PM
Last Updated : 09 Aug 2020 02:58 PM

பசுமை இந்தியா: மகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய்?

ஹைதராபாத்

பசுமை இந்தியா சவாலில், விஜய்க்கு சவால் விடுத்துள்ளார் மகேஷ் பாபு. அதனை விஜய் ஏற்பாரா என்பது சில நாட்களில் தெரியவரும்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு இன்று (ஆகஸ்ட் 9) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட அனைத்துத் திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்தில் நேற்று முதலே அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்திய அளவில் அதிகமான ட்வீட்களைக் கொண்ட ஹேஷ்டேக் என்று #HBDMaheshBabu ஹேஷ்டேக் சாதனை புரிந்துள்ளது. ஏனென்றால் நேற்று (ஆகஸ்ட் 9) முதல் தற்போது வரை 40 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் இடையே #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும்.

பிறந்த நாளை முன்னிட்டு #GreenIndiaChallenge-ல் இன்று பங்கேற்றுள்ளார் மகேஷ் பாபு.

மரக்கன்றை வைக்கும் வீடியோவை வெளியிட்டு மகேஷ் பாபு தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:

"எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது. நான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்தச் சங்கிலி, எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தரும்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்கிறேன். பசுமையான உலத்தை நோக்கி ஒரு அடி. இந்த முன்னெடுப்பைச் செய்யும் எம்.பி சந்தோஷ்குமாருக்கு நன்றி".

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

தற்போது மகேஷ் பாபு விடுத்திருக்கும் இந்தச் சவாலை விஜய் ஏற்பாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும். ஏனென்றால், இதேபோன்று #BeTheRealMan சவாலை சிரஞ்சீவி, ரஜினிக்கு விடுத்திருந்தார். அதை ரஜினி செயல்படுத்தவில்லை. மகேஷ் பாபு விடுத்திருக்கும் சவாலை விஜய் ஏற்றால், அது தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பிரபலமாகும் என்று உறுதியாக நம்பலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x