Published : 08 Aug 2020 01:44 PM
Last Updated : 08 Aug 2020 01:44 PM

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி: அமைச்சர், ஆட்சியர் பாராட்டு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இதனால் ஜோதிகாவுக்கு அமைச்சர் மற்றும் ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா. குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாகவும் வழங்கியுள்ளார்.

தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருதுதுரை ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

"ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ், "ஜோதிகாவின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருதுதுரை, "தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி. அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் கைகோக்கும்போது அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகாவின் உதவி சரியான முன் உதாரணம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x