Published : 07 Aug 2020 08:29 PM
Last Updated : 07 Aug 2020 08:29 PM

'பெல் பாட்டம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் 'தலைவாசல்' விஜய்

மும்பை

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகும் 'பெல் பாட்டம்' படத்தில் தலைவாசல் விஜய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் படம் 'பெல் பாட்டம்'. ரஞ்சித் எம் திவாரி இயக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் லண்டனில் முடித்துவிட்டுத் திரும்புவது எனத் திட்டமிட்டு நேற்று (ஆகஸ்ட் 6) கிளம்பியது படக்குழு.

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே வெளிநாட்டுக்குச் சென்று படமாக்கப்படும் முதல் திரைப்படம் என்ற பெயரை 'பெல் பாட்டம்' பெற்றுள்ளது. இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

தனி விமானம், முகக் கவசங்கள், படக்குழுவினருக்குக் கையில் எப்போதுமே வாட்ச் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 'பெல் பாட்டம்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் 'தலைவாசல்' விஜய். 2019-ம் ஆண்டு வெளியான 'ஜங்கிள்' என்ற இந்திப் படத்துக்குப் பிறகு, அவர் நடிக்கவுள்ள 2-வது படமாக 'பெல் பாட்டம்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் படப்பிடிப்புக்காக நேற்று (ஆகஸ்ட் 6) படக்குழுவினருடன் இவரும் பயணப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x