Last Updated : 07 Aug, 2020 01:04 PM

 

Published : 07 Aug 2020 01:04 PM
Last Updated : 07 Aug 2020 01:04 PM

சினிமாவிலிருந்து விலகியதன் காரணம் என்ன? - முதல் முறையாக மனம் திறந்த கேமரூன் டயாஸ் 

தான் சினிமாவிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை கேமரூன் டயாஸ் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு வெளியான ‘தி மாஸ்க்’ திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானவர் கேமரூன் டயாஸ். அப்படம் பெரும் வெற்றி பெற்றதயடுத்து ‘தி லாஸ்ட் சப்பர்’, ‘பீயிங் ஜான் மால்கோவிச்’, ‘கேங்ஸ் ஆஃப் நியூயார்க்’, ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். இதுவரை நான்கு முறை சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டின் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக அறிவிக்கப்பட்டார்.

புகழின் உச்சத்தில் இருந்த கேமரூன் டயாஸ் 2014 ஆம் ஆண்டு ‘ஆன்னி’ திரைப்படத்தோடு தன் திரை வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டார். எந்தக் காரணத்தையும் அறிவிக்காமல் திடீரென கேமரூன் டயாஸ் சினிமாவிலிருந்து விலகியது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் தான் சினிமாவிலிருந்து விலகியதற்கான காரணத்தைப் பற்றி முதன்முறையாகக் கூறியுள்ளார் கேமரூன் டயாஸ்.

இதுகுறித்து அவர் ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

''நான் என் வாழ்க்கையில் வித்தியாசமான பல விஷயங்களைச் செய்யவேண்டும் என்று முடிவு செய்தேன். பணி நிமித்தமாக, நடிப்புக்காக, படங்கள் எடுப்பதற்காக நீண்ட தூரம் சென்றுவிட்டேன். அது என்னைச் சோர்வடையச் செய்துவிட்டது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காக நான் எதுவுமே செய்திருக்கவில்லை.

என் ஆன்மாவுக்கு மன அமைதி தேவைப்பட்டது. ஒருவழியாக நான் என்னைக் கவனித்துக் கொள்கிறேன். என் குடும்பத்துக்காகவும், நண்பர்களுக்காகவும் நேரத்தைச் செலவிட்டு வருகிறேன்''.

இவ்வாறு கேமரூன் டயாஸ் கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெஞ்சி மேடன் என்ற இசைக் கலைஞரை கேமரூன் டயாஸ் திருமணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x