Published : 06 Aug 2020 07:05 PM
Last Updated : 06 Aug 2020 07:05 PM

இனிமேல் விபத்து நிகழாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை: கமல்

சென்னை

இனிமேல் விபத்து நிகழாமல் பார்த்துக் கொள்வது தான் நமது கடமை என்று கமல் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் 'இந்தியன் 2'. சென்னைக்கு அருகே தனியார் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்த படப்பிடிப்பில் பிப்ரவரி 19-ம் தேதி இரவு கோர விபத்து நடைபெற்றது. இதில் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்தார்கள்.

இந்தச் சம்பவத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய், கமல் 1 கோடி ரூபாய் மற்றும் இயக்குநர் ஷங்கர் 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவித்தார்கள். ஆனால், யாருக்குமே பணம் கொடுக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததே காரணம் என கூறப்பட்டது.

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 6) மாலை 'இந்தியன் 2' விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கமல், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் கமல் பேசியதாவது:

"எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தாக நினைத்துத் தான் இதைச் செய்திருக்கிறோம். ஆனால், அதை விட பெரிய கடமை நமது அனைவருக்குமே காத்திருக்கிறது. வரும் முன் காப்பது. விபத்து நடந்த ஒரு வாரத்துக்குள்ளேயே ஆர்.கே.செல்வமணியை சந்தித்துப் பேசினோம். இந்த கரோனா காலத்திலேயே மீண்டும் சேர்ந்து பேச முடியவில்லை.

அந்தப் படப்பிடிப்பில் யாருக்கு வேண்டுமானாலும் இது நிகழ்ந்திருக்கலாம். இனிமே நிகழாமல் பார்த்துக் கொள்வது தான் நமது கடமை. இந்த கரோனா காலத்திலும் எப்படிச் செயல்படலாம் என்று சில செயல்முறைகளையும் வெளிநாடுகளில் வகுத்திருக்கிறார்கள். அதுவும் இங்கு வர வேண்டும் எனத் தோன்றுகிறது.

வழக்கமாக இவ்வளவு பெரிய தொகை கொடுக்க தயாரிப்பாளர்கள் யோசிப்பார்கள். ஆனால், இவர்கள் செய்திருக்கிறார்கள். கலைஞர்கள் நாங்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். உடனே செய்துவிடுவோம், தயாரிப்பாளர் இவ்வளவு பெரிய உதவி செய்தது பெரிய விஷயம். அவருக்கு என் நன்றி"

இவ்வாறு கமல் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x