Last Updated : 30 Jul, 2020 12:11 PM

 

Published : 30 Jul 2020 12:11 PM
Last Updated : 30 Jul 2020 12:11 PM

சுஷாந்தை ரியா துன்புறுத்தினார்: முன்னாள் காதலி குற்றச்சாட்டு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.

மறைந்த நடிகர் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் நடிகை ரியா உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு சுஷாந்த் பாலிவுட்டில் நல்ல நிலையில் இருக்கும்போது, ரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என் மகனிடம் அவர் வாழ்ந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாகக் கூறி அவரை அந்த வீட்டைக் காலி செய்யுமாறு கூறியதாகவும், இது அவரது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் அவருக்குத் தொடர்பே இல்லாத ஆட்களுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், சுஷாந்தின் லேப்டாப், பணம், கிரெடிட் கார்டுகள், பின் நம்பர் ஆகியவற்றை ரியா குடும்பத்தினர் திருடிவிட்டதாகவும் கே.கே. சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பிஹார் போலீஸார் ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் உயிருடன் இருக்கும்போது அவரை ரியா துன்புறுத்தியதாக பிஹார் போலீஸாரிடம் சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதா தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனது முதல் படமான ‘மணிகர்னிகா’ வெளியான சமயத்தில் சுஷாந்துடன் பேசிக் கொண்டிருந்தபோது, ரியா உடனான காதலில் தான் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர் தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும், விரைவில் ரியாவுடனான உறவைத் தான் துண்டித்துக் கொள்ள விரும்புவதாகவும் சுஷாந்த் தன்னிடம் கூறியதாக அங்கிதா போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ரியாவின் மீது சுஷாந்தின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைக் குறிப்பிட்டு அங்கிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘நீதி வெல்லும்’ என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x