Published : 28 Jul 2020 09:13 PM
Last Updated : 28 Jul 2020 09:13 PM

துல்கர் சல்மானின் புதிய படம் அறிவிப்பு

ஹைதராபாத்

ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கவுள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. பிப்ரவரி 28-ம் தேதி தமிழில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டது. இரண்டிலுமே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். தெலுங்கில் 'மஹாநடி' படத்துக்குப் பிறகு துல்கர் சல்மான் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை. முழுமையாக மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இன்று (ஜூலை 28) துல்கர் சல்மானின் பிறந்த நாளாகும். மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் மட்டுமன்றி அனைவருமே அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'மஹாநடி' படத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். 1964-ம் ஆண்டின் பீரீயட் காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் உருவாக்கவுள்ளார்கள்.

"ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை" என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. துல்கர் சல்மானின் பிறந்த நாள் ஸ்பெஷலாக இப்படத்தின் கான்செப்ட் போஸ்டர் ஒரு அழகான டெலிகிராமைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நிழற்படத்தில் துல்கர் ஒரு ராணுவ வீரனாகத் தோன்றுகிறார், அதில் இரண்டு கைகளும் ஒன்றாக இணைவது ஒரு காதல் பக்கத்தைக் குறிக்கிறது. போர்ப் பின்னணியில் ஒரு காதல் கதையாக உருவாகவுள்ளது.

இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார். வைஜெயந்தி மூவீஸ் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள்.

— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 28, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x