Last Updated : 28 Jul, 2020 04:48 PM

 

Published : 28 Jul 2020 04:48 PM
Last Updated : 28 Jul 2020 04:48 PM

தனுஷ்: தமிழ் சினிமாவின் மாரியா? அசுரனா?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறி, இந்திய சினிமாவில் உற்று கவனிக்கக்கூடிய ஆளுமையாக உருவெடுத்து, சர்வதேச சினிமாவில் தடம் பதித்திருக்கும் தனுஷின் பிறந்த நாள் இன்று!

பென்சில் மாதிரி இல்லையில்லை பென்சிலில் கோடு போட்ட மாதிரி இருக்கும் ஒல்லிப் பிச்சானாக இருக்கும் தனுஷின் சாதனை ஏன் பேசப்பட வேண்டும்? ஒரு நடிகர் என்றால் உடல் எடையைக் கூட்டி, குறைத்து கதாபாத்திரத் தன்மைக்கு ஏற்ப மாற வேண்டும். ஆனால், தனுஷிடம் அந்த அம்சத்தை மட்டும் எதிர்பார்க்கவே முடியாது. அப்படி இருக்கையில் தனுஷ் எப்படித் தனித்துவக் கலைஞனாக மதிப்பிடப்படுகிறார்?

பள்ளிப் படிப்பையே முடிக்காத 16 வயதில் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் தனுஷ்.

2002-ம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ் சினிமாவில் சலனத்தை ஏற்படுத்தியது. பேசாப் பொருளைச் சற்று அதிகமாகவே பேசத் துணிந்தது. டீனேஜ் இளைஞனின் பாலியல் கிளர்ச்சி, சுய கட்டுப்பாடு இல்லாத பாலியல் விழைவு, தோழியுடன் எல்லை மீறல், குறித்து விடலைப் பருவத்துக்கே உரிய உடல் மொழியில் தனுஷ் வெளிப்படுத்தினார். ஒழுக்கத்தைப் பின்பற்றுவதின் அவசியம் குறித்தும் இடித்துரைக்காமல் எடுத்துரைத்தார்.

வழக்கமான படங்களில் இருந்து 'துள்ளுவதோ இளமை' சற்று மாறுபட்டு இருப்பதாகப் பாராட்டு குவிந்தது. ஆனால், அந்த மரியாதையும், மதிப்பும் தனுஷுக்கு மருந்துக்கும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் அவர் கண்டுகொள்ளப்படவே இல்லை. அதற்காக அவர் கவலைப்படவில்லை. முடங்கிப் போகவில்லை.

தனுஷ் விருப்பப்பட்டு சினிமாவுக்குள் வரவில்லை. அது ஒரு தற்செயல் விபத்து என்றுகூட கூறலாம். அப்பா, அண்ணன் மூலம் தனுஷின் சினிமாவுக்கு வந்த தனுஷ் ஆரம்பத்தில் தடுமாறினார். ஆனால், அடுத்தடுத்துத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி!

தெரிந்தோ தெரியாமலோ 'துள்ளுவதோ இளமை', 'புதுப்பேட்டை', 'மரியான்' என நிறைய படங்களில் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், பெரும்பாலான படங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை அல்லது விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்த இளைஞராகவே தனுஷ் நடித்துள்ளார்.

'காதல் கொண்டேன்' படத்தில் நடித்த தனுஷை யார் இந்த இளைஞன்? என்று தமிழ் சினிமா திரும்பியும் விரும்பியும் பார்த்தது. ஏனெனில், இரண்டாவது படத்திலேயே எதிர் நாயகனாக நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனாலும், தனுஷ் எனும் நடிகனை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் புறக்கணிப்பின் வலியை, தாழ்வு மனப்பான்மையில் உழலும் தவிப்பை, இட ஒதுக்கீட்டில் இன்ஜினீயரிங் சீட் கிடைத்த மாணவனின் திறமையை, கெட்டுப்போன சாப்பாடாக இருந்தாலும் அதையே அப்படியே அள்ளி விழுங்கிய வறுமையின் நிழலை அப்படியே பிரதிபலித்தார் தனுஷ்.

தனுஷ் இன்ஜினீயரிங் கல்லூரியில் சேரும் முதல் நாள் ஒரு ஆட்டோக்காரனிடம் அடிவாங்கி அவமானப்பட்டு, வியர்க்க விறுவிறுக்க கல்லூரி வகுப்புக்குள் நுழைகிறார். பாடம் நடத்தும் பேராசிரியரிடம் அனுமதிக் கடிதம் கொடுக்கிறார். ''ஸ்டூடண்ட்டா.. நீ'' என்று ஏளனத்துடன் கேட்கும் அவர், ''ஏதாவது ஒரு கோட்டாவுல உள்ளே நுழைஞ்சிடுறானுங்க... இவங்ககூடல்லாம் தாலியறுக்கணும்னு என் தலையில எழுதியிருக்கு'' என்று அலுத்துக்கொள்கிறார்.

இரவில் பகுதி நேரமாக சர்வர் வேலை செய்துவிட்டு பகலில் வகுப்பில் தூங்கி விடுகிறார் தனுஷ். ''அப்போது 2 நாள் ப்ரபரேஷன் .. 6 புக் ரெஃபரன்ஸ் எடுத்து இந்தக் கணக்கைப் போடுறேன். இந்த பிராப்ளம் புரியலைன்னா அடுத்த நாளும் சொல்லித் தர்றேன்'' என்று பேராசிரியர் ஒருவர் ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார். அப்போது தூங்கிக்கொண்டிருக்கும் தனுஷின் முகத்தில் டஸ்ட்டரைத் தூக்கி எறிகிறார்.

''ஃப்ரீயா சீட்டு, ஃப்ரீயா சாப்பாடு.. தின்னுட்டு இங்கே வந்து தூங்குவீங்க. வெட்கமா இல்லை... ப்ராப்ளம்... படிக்காவது தெரியுமா? உனக்கு தெரியாதுன்னு தெரியும். இதை முன்னே பின்னே பார்த்திருக்கியா? நீ எதுக்குமே லாயக்கில்லை.. தொடப்பக்கட்டை மாதிரியாவது நில்லு'' என்று அவமானப்படுத்துகிறார்.

தனுஷ் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்தச் சிக்கலான, புதிர் மிகுந்த கணக்கை சத்தமில்லாமல் போட்டு முடித்துவிட்டு மறுபடியும் அமைதியாகத் தூங்குவார்.

நீட் தேர்வு ரத்து என்ற கோரிக்கையும், மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு குறித்த வழக்கும் நடந்து கொண்டிருக்கும் தருணம் இது.

கோட்டாவில் வந்தால் கோட்டுவா விடத்தான் லாயக்கா? அதுதான் பொதுப் புத்தி என்றால் அதன் மீது கல்லெறிந்து கோட்டாவில் வரும் மாணவன் முட்டாள் இல்லை, அவன் ஜீனியஸ்தான் என்பதை தன் சத்தமில்லாமல் உணர்த்தி இருப்பார் தனுஷ்.

'புதுப்பேட்டை', 'பொல்லாதவன்', 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'தேவதையைக் கண்டேன்', 'ஆடுகளம்', 'தொடரி', 'வடசென்னை', 'அசுரன்' என பெரும்பாலான படங்களில் விளிம்புநிலைச் சமூகத்தைச் சார்ந்த இளைஞனாகவே தனுஷ் நடித்துள்ளார் என்பதை ரீவைண்ட் செய்து அறிந்துகொள்ளலாம்.

பலவீனங்களை பலங்களாக மாற்றிய கலைஞன்

நிறைய தாதா சினிமாக்களுக்கு மத்தியில் வந்த 'புதுப்பேட்டை' 2006-ம் ஆண்டிக் வெளியானபோது கொண்டாடப்படவில்லை. இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்போதெல்லாம் தோளில் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்கிறார்கள்.

தனுஷின் ஒல்லிப் பிச்சான் உடல்வாகு ரவுடிக்கான தோற்றத்தை முன்னிறுத்தவில்லை என்பது பெரும்குறையாகச் சொல்லப்பட்டது. படத்தின் வெற்றியைத் தடுத்த காரணி இதுதான் என்று விவாதிக்கப்பட்டது. ஆனால், அதே உடல்வாகுதான் இன்று தனுஷை பள்ளிக்கூட மாணவனாக நடித்தால் ஏற்க வைக்கிறது. மீசை எடுத்தால் ஸ்கூல் பையன், தாடி வெச்சா ரவுடி என நம்பகத்தன்மையுள்ள நடிப்பாக சிலாகிக்கப்படுகிறது.

சிவாஜி, கமல், விக்ரம் போன்ற முன்னோடிக் கலைஞர்களைப் போல தனுஷால் எடையைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாதுதான். ஆனால், கதாபாத்திரத்துக்கான பரிமாணத்தை மிகச் சாதாரணமாக நடிப்பில் கடத்திவிடக்கூடிய அசாத்திய திறமை தனுஷுக்கு இருக்கிறது என்பது நிதர்சனம்.

'மரியான்' படத்தில் சூடான் தீவிரவாதிகளிடம் சிக்கியபோதும், பணிபுரியும் நிறுவனத்திடம் நிலைமையைச் சொல்லிப் பணம் கேட்காமல் காதலி பனிமலரிடம் தொலைபேசியில் கசிந்துருகி முத்தம் கொடுத்து நடிப்பால் இதயத்தில் இடம் பிடிக்கிறார் தனுஷ்.

'பொல்லாதவன்' படத்தில், அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்த வேளையில், அங்கு வரும் ரவுடிகளிடம் பேசும்போது கண்ணில் கோபம் தெறிக்க, ‘போட்றா பார்க்கலாம்' என்று டேனியல் பாலாஜியிடம் நடிப்பால் மிரட்டிய தனுஷை அவ்வளவு சீக்கிரம் கடந்து செல்ல முடியாது.

'3' படத்தில் கழுத்துக்குக் கீழே கத்தியை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முடியாமல் கலங்கி அழுது நம் கண்களிலும் நீர் திரள வைத்தார்.

'வடசென்னை' படத்தில் துரோகத்துக்கும் விசுவாசத்துக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை நடிப்பில் நிறுத்தி அன்பு ராஜனாக மாறும் படிநிலையில் பக்குவமான, தேர்ந்த நடிப்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

அசுரனில் மூத்த மகனுக்காக ஊரார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, தளர்வாக நடக்கும் காட்சி மிக முக்கியமானது. நெல்லை புழுதிமண்ணின் நடுத்தர வயதுத் தகப்பனை அப்படியே கண்முன் நிறுத்தி நடிப்பின் உச்சம் தொட்ட தனுஷை வாழ்த்தாமல் இருக்க முடியுமா?.

உறவுச் சிக்கல், உளச் சிக்கலைப் பூரணமாக வெளிப்படுத்தும் குணாளன்

தனுஷின் ஆரம்பக் காலப் படங்களில் இருந்து இப்போதுவரை ரவுடி அல்லது வன்முறையாளர், உளச் சிக்கல் கொண்ட இளைஞர், உறவுச் சிக்கலை எதிர்கொள்ளும் இளைஞர் என்ற 3 குணாம்சங்கள் அவரை விட்டு விலகாமல் பற்றிக்கொண்டே வருகின்றன

'காதல் கொண்டேன்' படத்தில் புறக்கணிப்பாலும், ஆதரவற்ற நிலையிலும் தன் திறமையை வெளிப்படுத்தாமல் உளச் சிக்கலில் ஆட்பட்டுத் தவிக்கும் வினோத், திவ்யா மூலம் தன் அடையாளத்தை அறிந்துகொள்கிறார். அதன் மூலம் அவர் மீதான பொசசிவ்னெஸ் காரணமாக அந்த உறவைக் கைவிட முடியாமல், ஒருதலைக் காதலால் திவ்யாவைக் கடத்துகிறார்.

'மயக்கம் என்ன' கார்த்திக், தான் மிகப் பெரிதாக நினைத்த புகைப்படக் கலைஞர் தனக்கு வாய்ப்பு தராமல் அவமானப்படுத்தும்போதும், தனது புகைப்படத்தை அவர் புகைப்படமாகக் காட்டி விருது வென்றபோதும் விரக்தியின் விளிம்புக்குச் சென்று உளச் சிக்கலுக்கு ஆளாகிறார். உடனிருக்கும் மனைவி யாமினியின் கரு கலையவும் காரணமாகிறார்.

'3' படத்தின் ராம் காதல் திருமணமாகக் கைகூடிய நிலையில், 'பைபோலர் டிஸ் ஆர்டர்’பிரச்சினையால் அவதிப்பட்டு மரணத்தின் வாசனையை நுகர்ந்து தன்னைப் பலிகொடுக்கிறார்.

இப்படி தொடர்ந்து மனநலப் பிரச்சினையுள்ள கதாபாத்திரங்களில் நடிப்பது சுலபமில்லை. அதனால் வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தனுஷ் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்தல், கதாபாத்திர மனநிலையைப் பிரதிபலித்தல், பாத்திரத்துக்கு ஏற்ப உருமாறுதல், தோற்ற வெளிப்பாடு, உடல்மொழி வெளிப்பாடு, வசன உச்சரிப்பு என அத்தனை அம்சங்களிலும் தன்னை நிரூபித்தார்.

உறவுச் சிக்கலை எதிர்கொள்ளத் தெரியாதவரா தனுஷ்?

அப்படி ஒரே அடியாகச் சொல்லிவிட முடியாது.

'காதல் கொண்டேன்' திரைப்படத்தின் காட்சியின் மூலம் இதனை விளக்கலாம்.

திவ்யா வீட்டுக்கு குரூப் ஸ்டடிக்கு வரும் வினோத் திடீரென்று கதவைத் தாழிடுகிறான். புரியாமல் சின்னதாய் கலவரத்துடன் பார்க்கிறாள் திவ்யா.

மெத்தையில் ஓடி ஆடி விளையாடி குளிர்பானங்கள், ஸ்நாக்ஸ் என ரவுண்டு கட்டி முடித்து பாத்ரூம் போய் களைத்துப் படுத்து உறங்குகிறான் வினோத்.

உண்மையில் வினோத்துக்கு என்னதான் தேவை? மறுநாள் காலையில் அதை அவரே சொல்கிறார்.

''உனக்கு ஏதாவது பிரச்சினையா?'' என்று திவ்யா கேட்கிறாள்.

''இல்லையே நான் சந்தோஷமா இருக்கேன். நீதான் என் கூடவே இருக்கியே'' என்று சொல்கிறான்.

சட்டை இல்லாமல் அருகில் தூங்கும் வினோத்தை மடியில் கிடத்தி தலை வருடுகிறாள் திவ்யா. அப்போதே வினோத்தின் கண்ணீரில் கெட்டது கரைந்து போய்கிறது.

''எனக்கு இது போதும்டா. உன் கூட இருக்கணும். அவ்ளோதான். நீ புரிஞ்சுக்கிட்டா போதும். கூடவே இருந்தால்போதும், நாய்க்குட்டி போல இருக்கேன். ஒரு மூலையில இருந்துக்கிறேன். கேட்டதெல்லாம் கொண்டு வர்றேன். நீ ஆதியை லவ் பண்றதா நினைக்குற? அதெல்லாம் இல்லடா. உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தது நன்றிக்கடன். அதுக்கு தேங்க்ஸ் சொல்லிடு. அதைப் போய் லவ் பண்றதா நினைக்குற மக்கு. நமக்குள்ள இருக்குறதுதான் லவ். எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போற பாரு. அதான் லவ்'' என்பான் வினோத்.

'புதுப்பேட்டை'யில் தன் நண்பன் மணியின் தங்கை திருமணத்துக்குத் தாலி எடுத்துக்கொடுத்து ஆசிர்வாதம் செய்ய வந்தவன், தானே தாலி கட்டுகிறான். அங்கே கொக்கி குமாருக்கு எந்த உறுத்தலும் இல்லை.

'மயக்கம் என்ன' படத்தில் நண்பன் சுந்தர் ஒருதலையாகக் காதலிக்கும் பெண் யாமினி. அவர் கார்த்திக்கைக் காதலிப்பது தெரியவர, சிறிய தடுமாற்றத்துக்குப் பிறகு கார்த்திக்கும் காதலிக்கிறார். இதில் இருவருக்கும் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. நண்பன் சுந்தர் கார்த்திக்கின் தங்கையைத் திருமணம் செய்துகொள்கிறார். இந்தத் தலைமுறை உறவுச் சிக்கலை எவ்வளவு சர்வ சாதாரணமாகக் கடக்கிறது என்பதை இதில் உணர முடிகிறது.

'ஆடுகளம்' படத்தில் குரு மீது கொண்ட விசுவாசம் காரணமாக பேட்டைக்காரனின் அழுக்கு முகத்தை அப்படியே தனக்குள் பொத்திவைத்துக் கொள்கிறான் கருப்பு. அப்பாவைப் போன்ற அவரை அசிங்கப்படுத்துவதில், அவமானப்படுத்துவதில் கருப்புவுக்கு துளியும் உடன்பாடு இல்லை. அதனாலேயே அந்த உணமையை அப்படியே பூட்டிவைத்துக்கொண்டு காதலியுடன் வெளியூர் செல்கிறான்.

இப்படி உறவுச் சிக்கல் கொண்ட கதாபாத்திரங்களில் தன் தேர்ந்த நடிப்பை தனுஷ் வழங்கியுள்ளார்.

வசன உச்சரிப்பு, நகைச்சுவையில் அப்ளாஸ் அள்ளும் நடிகன்

தனுஷின் வசன உச்சரிப்பும் படத்துக்குப் படம் மெருகேறி இருப்பதைக் காணலாம். 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் பெண்களை ஆண்கள் ஃபாலோ செய்வது, காதலிக்க வைப்பது குறித்து ஐந்து நிமிடம் மூச்சு விடாமல் பேசுவார் தனுஷ். அது கொஞ்சம் பெண்களை டீஸ் செய்வது போல இருக்கும். ஆனால், அதே பாணியில் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் வில்லனிடம் மூச்சு விடாமல் இன்ஜினீயரிங் படித்து வேலை கிடைக்காமல் இருக்கும் மாணவர்களின் வலிகளைப் பதிவு செய்வார். ரஜினி ஸ்டைலில் தனுஷ் பேசி இருந்தாலும் அது பரவலான வரவேற்பைப் பெற்றது.

நகைச்சுவையில் தனுஷ் தன் முழுத் திறமையைப் பல படங்களில் நிரூபித்துள்ளார். 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் தம்பியுடனான காட்சிகள், 'குட்டி' படத்தில் ஸ்ரேயாவின் காதலனாக அர்ஜுன் (சமீர்) குழுவினரிடம் பேசுவது, 'யாரடி நீ மோகினி' படத்தில் கிராமத்துக் காட்சிகள், 'உத்தமபுத்திரன்' படத்தில் விவேக்குடன் இணைந்து ஜெனிலியாவின் மாமா குடும்பத்தை ஏமாற்றுவது, 'மாரி' படத்தில் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத்தைச் சதாய்ப்பது என அந்தப் பட்டியல் பெரிது.

தனுஷ் மாரியா? அசுரனா?

'திருடா திருடி', 'வேலையில்லா பட்டதாரி' படங்களின் அவுட்லைன் ஒரே மாதிரிதான் இருக்கும். முதல் பாதி முழுக்க சேட்டை செய்யும் இளைஞன், இரண்டாம் பாதி முழுக்க பெற்றோரின் சொல்படி நல்ல பிள்ளையாய் நடக்கும் பையன். கிட்டத்தட்ட இது ரஜினி ஃபார்முலாவாக இருந்தாலும் வணிக வெற்றிக்காக தன்னை ஒரு என்டர்டெயினராகத் தக்க வைத்துக்கொள்வதற்காக தனுஷ் இதுபோன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து வருகிறார். 'தேவதையைக் கண்டேன்', 'திருவிளையாடல் ஆரம்பம்', 'படிக்காதவன்', 'மாப்பிள்ளை', 'உத்தமபுத்திரன்', 'குட்டி', 'வேங்கை', 'வேலையில்லா பட்டதாரி', 'அனேகன்', 'மாரி', 'கொடி', 'மாரி 2', 'பட்டாஸ்', 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' எனப் பல படங்கள் இதில் அடக்கம்.

அதேசமயம் கமர்ஷியல் கல்லா கட்டுவதே குறிக்கோள் என்று தனுஷ் தன் சினிமா வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளவில்லை. 'புதுப்பேட்டை', 'அது ஒரு கனாக்காலம்', 'ஆடுகளம்', 'ஷமிதாப்', 'மயக்கம் என்ன', '3', 'மரியான்', 'வடசென்னை', 'அசுரன்' என அதிகப் படங்களில் பரிசோதனை முயற்சிகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட தனுஷின் கலைத் தாகத்தையும் கவனிக்க வேண்டும்.

இன்னும் நுட்பமாக தமிழ் சினிமாவின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், காலந்தோறும் இரு வகையான நடிகர்களே மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அவர்களையே ரசிகர்கள் கொண்டாடியும் போற்றியும் வருகின்றனர். மக்களின் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் கொடுக்கும் மாஸ் என்டர்டெயினர் ஒரு வகை. பரிசோதனை முயற்சிகளுக்கான களத்தில் தன்னை நிரூபித்து காலத்தால் மறக்க முடியாத படங்களைக் கொடுக்கும் ஃபெர்பார்மர் மற்றொரு வகை.

தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினிகாந்த்- கமல்ஹாசன் என்று நடிகர்களை இப்படி வரிசைப்படுத்தலாம். ஆனால், அதற்கடுத்த தலைமுறையில் மக்கள் மனதை வென்ற நடிகர்களான விஜய்யும் அஜித்தும் மாஸ் நடிகர்களாகவே வலம் வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து ஃபெர்பார்மர், என்டர்டெயினர் என இரண்டும் சேர்ந்த கலவையாக தன் இருப்பைப் பதிவு செய்து தமிழ் சினிமாவில் தனித்துவ இடங்களைப் பிடித்த நடிகராக தனுஷைக் குறிப்பிட முடியும். அப்படி என்றால் தனுஷ் மாரியா? அசுரனா? என்று கேட்டால் ஃபெர்பார்மர், என்டர்டெயினர் என்ற டபுள் ரோல்களிலும் அவர் அசத்துகிறார் என்பதே மறுக்க முடியாத உண்மை.

வழக்கமான ரவுடி சினிமாவா மாரி?

இத்தனைக்கும் மாரி வழக்கமான ரவுடி சினிமா இல்லை. பொதுவாக ரவுடி, தாதா, கேங்ஸ்டர் என்றால் அளவாகப் பேசுபவர்களாக, கண் அசைந்தால் காரியத்தை முடிக்கும் அடிப்பொடிகள் வைத்திருப்பவர்களாகவே இருப்பர். ஆனால், மாரி அப்படியல்ல. கெத்தாகத் திரிந்தாலும் அடிப்பொடிகளாக இருக்கும் ரோபோ ஷங்கரும், கல்லூரி வினோத்தும் அவரைக் கலாய்க்க அனுமதிப்பார்.

''போற வர்றவனை அடிக்குற பெயிண்ட் அடிக்கமாட்டியா? ஆட்டோவை வாய்ல ஓட்டினா பத்தாது. ஸ்டார்ட் பண்ணி ஓட்டணும்'', ''அந்தப் பொண்ணுக்கு கரெக்ட் நீ இல்லைன்னு எங்களுக்குத் தெரியுது. அந்த பவுடர் மூஞ்சிக்கு தெரியலையே.'' என்று இஷ்டத்துக்கும் ரோபோ ஷங்கர் கலாய்த்தாலும் அதை ஒரு எல்லை வரை அனுமதிக்கும் மாரி, உடனே தன் மீதான மரியாதைக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வார்.

தன் மீதான பயத்தை ஏரியா மக்களிடம் விதைத்துக்கொண்டே இருப்பார். அதே சமயம் சின்னக் குழந்தைகளின் பலூன்களை உடைப்பது, இவ்ளோ டிவி இருக்குது. ஒரு டிவில கூட ஏன் இந்தியா ஜெயிக்கலை? என இம்சை கூட்டுவது, ஏன்டா பீர் விலையை ஏத்துறாங்க என்று காண்டாவது, ஆட்டோ ஓட்டுநர் ஆனதும் அருகில் இருப்பவர்களையும் ஆட்டோவில் அள்ளிப்போட்டுக்கொண்டு பணம் கறப்பது என ஜாலியாக சேட்டை செய்யும் தாதாவை அதற்கு முன் பார்த்ததில்லை.

கூட்டு உழைப்பின் அசுரன்

28-வது வயதில் 'ஆடுகளம்' படத்துக்காக சிறந்த தேசிய விருது பெற்ற நடிகர், 'காக்காமுட்டை', 'விசாரணை' படங்களின் இணை தயாரிப்பாளராகப் பங்கு பெற்றார். அந்தப் படங்களும் தேசிய விருதுகள் பெற்று தனுஷுக்கும் வெற்றிமாறன், மணிகண்டனுக்கும் பெருமை சேர்த்தன.

'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகவும் ஒரு ஃபீல் குட் கமர்ஷியல் படத்தைக் கொடுத்து இயக்குநர் வரிசையிலும் அழுத்தமாக இடம் பிடித்துள்ளார்.

'3' படத்தில்தான் அனிருத் ஆச்சர்ய வரவாக, இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அவரின் இசையில் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலக அளவில் ஹிட்டானது. இன்று தமிழ் சினிமாவில் கவன ஈர்ப்பு மிகுந்த இசையமைப்பாளராக அனிருத் உள்ளார்.

அதே படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு 'எதிர்நீச்சல்', 'காக்கிசட்டை' படங்களைத் தயாரித்துக் கொடுத்து கமர்ஷியல் நாயகனாக தனித் தடம் பதிக்க வைத்தார். விஜய் சேதுபதியின் நடிப்பில் 'நானும் ரவுடிதான்' படத்தைத் தயாரித்ததன் மூலம் அடுத்த தலைமுறை நடிகர்களையும் அரவணைத்தார்.

'பரட்டை என்கிற அழகு சுந்தரம்' படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் தனுஷ்- வெற்றிமாறன் படங்களில் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக மாற, அவர் இயக்கத்தில் 'வேலையில்லா பட்டதாரி', 'தங்கமகன்' படங்களில் நடித்தார் தனுஷ்.

தன்னைச் செதுக்கிய செல்வராகவன், வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்க உள்ளார். 'திருடா திருடி', 'சீடன்' படங்களை இயக்கிய சுப்பிரமணிய சிவாவை 'வடசென்னை', 'அசுரன்' எனத் தன் படங்களில் தொடர்ந்து நடிகராகப் பயன்படுத்தி வருகிறார்.

தனுஷ் சொல்லும் செய்தி

36 வயதில் 40க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள், 28-வது வயதில் தேசிய விருது, 'ராஞ்சனா', 'ஷமிதாப்' என இரு இந்திப் படங்கள் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர், 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' எனும் பிரெஞ்சு படத்தின் மூலம் சர்வதேச சினிமாவுக்குள்ளும் தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்தவர் தனுஷ். இதை அவர் நடிக்க வந்த 20 ஆண்டுகள் சாத்தியப்படுத்தி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

நினைக்காதது வேணும்னா நடக்காம இருக்கலாம். ஆனால் நினைக்கிறது கண்டிப்பா நடந்தே தீரும் - இது 'மரியான்' படத்தின் வசனம்.

தனுஷின் சினிமா கெரியர் சொல்லும் அழுத்தமான செய்தி இதுதான். பள்ளிக்காலத்தில் செஃப் எனும் சமையல் கலை நிபுணராக மாறுவதில் ஆர்வம் இருப்பதாகச் சொன்ன தனுஷ்தான் இன்று சர்வதேச சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து அசாத்திய திறமையால் விழிகளை வியக்க வைக்கிறார்.

உன் திறமை மீது நம்பிக்கை வை. நடக்கும் என்று நம்பி கடினமாக உழை. நீ நினைப்பது நடந்தே தீரும். இதுவே தனுஷ் நடிகர்களுக்கும் ஏன் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்லும் செய்தியாக உள்ளது.

மாரி செல்வராஜின் 'கர்ணன்', கார்த்திக் சுப்புராஜின் 'ஜெகமே தந்திரம்', ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமாருடன் நடிக்கும் 'அத்ரங்கி ரே' எனும் பாலிவுட் படம், அடுத்தடுத்து செல்வராகவன், வெற்றிமாறன் படங்கள் என தனுஷின் கால்ஷீட் நிரம்பி வழிகிறது. 37 வயதில் ஓர் ஆளுமையாக தன்னை நிறுவிக்கொண்ட தனுஷ் இன்னும் அரை நூற்றாண்டு ஆனாலும் தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் முகமாகவும் முகவரியாகவும் இருக்க இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்!

கட்டுரையாளர்: க.நாகப்பன்

தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x