Last Updated : 27 Jul, 2020 08:29 PM

 

Published : 27 Jul 2020 08:29 PM
Last Updated : 27 Jul 2020 08:29 PM

தனி விமானம், மருத்துவக் குழுக்கள்: பல்வேறு முன்னெச்சரிக்கையுடன் தொடங்கப்படும் 'பெல் பாட்டம்' படப்பிடிப்பு

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகும் 'பெல் பாட்டம்' படத்தின் படப்பிடிப்பைப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் லண்டனில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் இந்தியத் திரையுலகில் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறாமல் இருக்கிறது. மேலும், திரையரங்குகளும் திறக்கப்படாமல் இருப்பதால், புதிய படங்கள் வெளியாகி 100 நாட்களைத் தாண்டிவிட்டது.

சில மாநிலங்களில் படப்பிடிப்புக்கு அனுமதிக்கப்பட்டாலும், நடிகர்களோ கரோனா அச்சுறுத்தலால் வரவில்லை. தற்போது இந்தியில் ஒரு படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது.

1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் படம் 'பெல்பாட்டம்'. ரஞ்சித் எம் திவாரி இயக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் லண்டனில் முடித்துவிட்டுத் திரும்புவது எனத் திட்டமிட்டுள்ளனர். கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே வெளிநாட்டுக்குச் சென்று படமாக்கப்படும் முதல் திரைப்படம் என்ற பெயரை 'பெல் பாட்டம்' பெற்றுள்ளது.

இந்தப் படத்தை பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிலிருந்து லண்டனுக்குப் படக்குழுவினர் மட்டுமே செல்லக்கூடிய தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். படக்குழுவினருக்கு மருத்துவ ரீதியில் முகக் கவசங்கள் அளித்து அழைத்துச் செல்லவுள்ளார்கள்.

மருத்துவ ரீதியான முகக்கவசங்களையும் தவிர, நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் ஆக்ஸிஜன் அளவு, உடல் வெப்பம், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கும் வாட்ச் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த வாட்ச்சின் மூலம் ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் அளவீடுகளைப் பதிவுசெய்து, அவற்றில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று கண்காணிக்கவுள்ளது படக்குழு.

கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பில் அனைவருமே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவுள்ளனர். தேவையான காட்சிகளுக்கு மட்டுமே நெருங்கி நடிக்கவுள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் அனைத்திலும் சானிடைசர்கள் வைக்க உள்ளார்கள். மேலும், தினமும் படப்பிடிப்பு முடிந்தவுடன், படப்பிடிப்பு உபகரணங்கள் அனைத்தையுமே ஆல்கஹால் மூலம் தயாரிக்கப்பட்ட சானிடைசர் மூலம் சுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்போக, படப்பிடிப்புத் தளத்தில் எப்போதுமே ஒரு மருத்துவக் குழுவும் கூடவே இருப்பதுபோல முடிவு செய்துள்ளனர். தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகள் அனைத்துமே நடிகர், நடிகைகள் மட்டுமன்றி தொழில்நுட்பக் குழுவினர் தொடங்கி அனைவருக்குமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து இந்தியா திரும்பியவுடன், இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x