Published : 27 Jul 2020 05:01 PM
Last Updated : 27 Jul 2020 05:01 PM

பின்னணிப் பாடகி சித்ரா பிறந்த நாள் ஸ்பெஷல்: என்றும் இனிக்கும் இசைக்குயில்

சென்னை

இந்திய சினிமாவில் எத்தனையோ பெண் பாடகிகள் தமது குரலால் உயிர் கொடுத்துப் பல பாடல்களுக்கு சாகாவரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆனால், நடிகையரைப் போலவே பாடகிகளின் ஆயுட்காலமும் குறைவாகவே உள்ளது. விதிவிலக்காக சில நடிகைகள் பல ஆண்டுகள் வெற்றிகரமாக முன்னணியில் நின்று கோலோச்சுவதுபோல் சில பாடகிகளும் நீண்ட நெடுங்காலம் தம் குரல் வளத்தையும் திறமையையும் தக்கவைத்துப் பல தடைகளைக் கடந்து பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்துகிறார்கள். அப்படிப்பட்ட அரிதான சாதனைப் பாடகிகளில் ஒருவரான சித்ரா இன்று (ஜூலை 27) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பிறந்த சித்ரா முறைப்படி கர்னாடக சங்கீதம் பயின்றவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும் பெற்றவர். மத்திய அரசு தேசிய அளவில் பல்வேறு துறைகளில் திறமைசாலிகளுக்கு வழங்கிய கல்வி உதவித்தொகையை 1978 முதல் 1984 வரை பெற்றவர்.

1979-ல் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் சித்ராவின் குரலை தனது படங்களிலும் தனி இசைப் பாடல்களிலும் பயன்படுத்தினார். 1980களின் தொடக்க ஆண்டுகளில் வெளியான 'அட்டஹாசம்', ஸ்னேஹபூர்வம் மீரா', 'ஞான் ஏகனானு' போன்ற படங்களில் சித்ராவின் முதல் பாடல்கள் அமைந்தன. அதே நேரம் கே.ஜே.யேசுதாஸ் போன்ற மூத்த பாடகர்களுடன் இசை நிகழ்ச்சிகளிலும் பாடிவந்தார் சித்ரா.

1985-ல் ஃபாசில் இயக்கத்தில் வெளியான 'பூவே பூச்சூடவா' படத்தின் அசல் மலையாள வடிவம் 1984-ல் வெளியாகியிருந்தது. ஜெர்ரி அமல்தேவ் இசையில் அந்தப் படத்தில் சித்ரா பாடிய பாடல்களால் ஈர்க்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா அவரை தமிழுக்கு அழைத்துவந்தார். ஆனால் தமிழில் சித்ரா குரலில் இளையராஜா இசையில் பதிவுசெய்யப்பட்டது 'நீதானா அந்தக் குயில்' படத்தில் இடம்பெற்ற 'பூஜைக்கேத்த பூவிது' பாடல்தான். அதே நேரம் அந்தப் படமும் பாடல்களும் வெளியாவதற்கு ஒரு ஆண்டு முன்பாகவே 'பூவே பூச்சூடவா' படம் வெளியாகி அதில் சித்ரா பாடிய 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா' பாடல் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. அந்தப் பாடலே சித்ராவின் அடையாளமாகி 'சின்னக்குயில்' என்ற முன்னொட்டு அவருடைய பெயருடன் இணைந்துகொண்டது. சித்ராவின் குரல் குயில்போல் இருப்பதாலும் அவர் குரலுக்கு வயதாவதேயில்லை என்பதாலும் இன்றுவரை தமிழ் ரசிகர்கள் 'சின்னக்குயில்' சித்ரா என்றே அவரை அன்புடன் அழைக்கிறார்கள்.

1980-களில் தமிழ் ரசிகர்களை ஆட்கொண்டிருந்த பாடகியான ஜென்சியும் மலையாள மண்ணிலிருந்து வந்தவர்தான். அவரைத் தொடர்ந்து சித்ராவும் கேரளத்திலிருந்து வந்து தமிழில் பெரும் சாதனைகளை நிகழ்த்தினார். டி.எம்.எஸ்-பி.சுசீலா, எஸ்.பி,பாலசுப்பிரமணியம்-எஸ்.ஜானகி வரிசையில் மனோ-சித்ராவும் தமிழ் சினிமாவின் மிக அதிக எண்ணிக்கையில் மறக்கமுடியாத வெற்றிப் பாடல்களைப் பாடிய பாடகர் இணையாக நிலைபெற்றார்கள்

தமிழில் சித்ரா பாடிய முதல் பாடலின் முதல் சொல் 'சின்னக்குயில்' என்றிருப்பதாலும் சித்ராவின் குரல் குயில்போல் இருப்பதாலும் அவர் குரலுக்கு வயதாவதேயில்லை என்பதாலும் இன்றுவரை தமிழ் ரசிகர்கள் 'சின்னக்குயில்' சித்ரா என்றே அவரை அன்புடன் அழைக்கிறார்கள்.

இளையராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு அவருடைய இசையில் பல வெற்றிப் பாடல்களைப் பாடிய சித்ரா, ராஜாவுக்கு அடுத்த இசை மேதையான ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிக அதிக பாடல்களைப் பாடிய பாடகி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். ரஹ்மான் இசையில் பல்வேறு மொழித் திரைப்படங்களில் 115-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இது தவிர ரஹ்மான் இசையமைத்த தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தாய்மொழியான மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளும் முன்னணிப் பாடகியாக கடந்த 35 வருடங்களாகத் திகழ்கிறார் சித்ரா. இவை தவிர வங்கம், ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா எனப் பல்வேறு இந்திய மொழிப் படங்களிலும் தனிப் பாடல்களையும் பாடியுள்ளார். மொத்தமாக 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார் சித்ரா. இன்னும் பல ஆயிரம் பாடல்களைப் பாடும் அளவு குரல் வளத்துடனும் உத்வேகத்துடனும் இருக்கிறார்.

சித்ராவின் முதல் தேசிய விருது தமிழ்ப் படம் மூலமாகத்தான் கிடைத்தது 1985-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இசைக் காவியமான 'சிந்து பைரவி' படத்தில் 'பாடறியேன் படிப்பறியேன்', 'நானொரு சிந்து' ஆகிய பாடல்களைப் பாடியதற்காகச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார் சித்ரா. இது தவிர 'மின்சார கனவு' படத்தில் 'மானா மதுர மாமரக் கிளையிலே' பாடலுக்காகவும் 'ஆட்டோகிராப்' படத்தில் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்காகவும் தேசிய விருதை வென்றார் சித்ரா. இதுவரை மொத்தம் ஆறு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார் சித்ரா. இந்தியாவில் மிக அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்குரியவர். அவற்றில் சரிபாதி தமிழிலிருந்துதான் என்பதும் தமிழ் இசை ரசிகர்களின் பெருமிதத்துக்குரிய விஷயம்தான்.

இவை தவிர எட்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 36 மாநில அரசு விருதுகள், எண்ணற்ற சர்வதேச அங்கீகாரங்கள் சித்ராவின் சாதனை மகுடத்தை அலங்கரிக்கின்றன. இந்திய அரசின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார். வயது மூப்பால் ஓய்வு பெற்றுவிட்ட இசைக் கலைஞர்கள் பாடகர்களின் மருத்துவம் மற்றும் இதர முக்கிய செலவுகளுக்கு நிதி திரட்டுவதற்காக கேரளத்தைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறார். இசைத் துறையில் தனது முன்னோடிகளான எம்.எஸ்.சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர் ஆகியோரை கெளரவப்படுத்தும் வகையில் சிறப்பு இசை ஆல்பங்களை வெளியிட்டார்

இந்திய சினிமாவில் ஒரு பெண் கலைஞராக மிக அரிதான சாதனைகளை நிகழ்த்தி இன்றளவும் வெற்றிகரமாகத் திகழ்ந்துவரும் பாடகியான சித்ரா மென்மேலும் புதிய உயரங்களை அடைய வேண்டும் இசை ரசிகர்களை என்றென்றும் மகிழ்விக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x