Published : 21 Jul 2020 03:36 PM
Last Updated : 21 Jul 2020 03:36 PM

தீபிகா கதாபாத்திரம் ஆச்சரியமாக இருக்கும்: இயக்குநர் நாக் அஷ்வின்

ஹைதராபாத்

தீபிகா படுகோன் கதாபாத்திரம் அனைவருக்கும் ஒரு ஆச்சரியமாக இருக்கும் என்று 'பிரபாஸ் 21' படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

'ராதே ஷ்யாம்' படத்தைத் தொடர்ந்து நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் உருவாகவுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது. அந்நிறுவனத்தின் 50-வது ஆண்டு என்பதால் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்தில் பிரபாஸுக்கு நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாக பிரபாஸ் - நாக் அஷ்வின் படம் அமைந்துள்ளது.

தீபிகா படுகோன் ஒப்பந்தம் தொடர்பாக இயக்குநர் நாக் அஷ்வின் கூறியிருப்பதாவது:

"இந்த கதாபாத்திரத்தில் தீபிகாவின் நடிப்பைக் காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். இது வரை எந்த நடிகையும் நடிக்காத ஒரு கதாபாத்திரம் இது. இது அனைவருக்கும் ஒரு ஆச்சரியமாக இருக்கும். தீபிகா மற்றும் பிரபாஸ் ஜோடி படத்துக்கும், கதைக்கும் மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு விஷயமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்"

இவ்வாறு இயக்குநர் நாக் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x