Published : 20 Jul 2020 03:30 PM
Last Updated : 20 Jul 2020 03:30 PM

'மாநாடு' படப்பிடிப்பு எப்போது? - தயாரிப்பாளர் தகவல்

சென்னை

'மாநாடு' படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. சென்னையில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பின்பு ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது. அந்தச் சமயத்தில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கவே, படக்குழு சென்னை திரும்பியது.

தற்போது கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்புக்குச் செல்ல ஆயத்தமாகவுள்ளது படக்குழு. இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு 'மாநாடு' குழுவினரில் குறைந்த நடிகர்களை வைத்து ஒரு படத்தை உருவாக்கத் திட்டமிடுவதாகவும், அதை முடித்துவிட்டுத்தான் 'மாநாடு' தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியானது.

கரோனா அச்சுறுத்தலால் அதிகப்படியான ஆட்களை வைத்துப் படப்பிடிப்பு செய்ய முடியாததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் நேரடியாக 'மாநாடு' படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில், "அனைவருமே 'மாநாடு' அப்டேட்ஸ் கேட்கிறீர்கள். அரசாங்கம் எப்போது சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கும் என்று ஒட்டுமொத்தத் திரையுலகமும் காத்திருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் படப்பிடிப்புக்குச் சென்றுவிடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

முதலில் நடிகர்கள் குறைவாக இருக்கும் காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, பின்பு அதிகப்படியான நடிகர்கள் உள்ள காட்சிகளைப் படமாக்கலாம் எனத் திட்டமிட்டு படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

'மாநாடு' படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி, உதயா உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x