Published : 17 Jul 2020 05:13 PM
Last Updated : 17 Jul 2020 05:13 PM

'மனிதன்' போட்டோ ஷூட்டின் பின்னணி: எல்.ராமச்சந்திரன் பகிர்வு

சென்னை

விஜய் சேதுபதியை வைத்து 'மனிதன்' என்ற போட்டோ ஷூட் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து புகைப்படக் கலைஞர் எல்.ராமச்சந்திரன் பகிர்ந்திருக்கிறார்.

ஊரடங்கின் போது புகைப்படக் கலைஞர் எல்.ராமச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்தபோது, சேதுபதி லேசான மன வருத்தத்தில் இருந்திருக்கிறார்.

"நான் மிகச் சோர்வாக இருக்கிறேன். என் வீட்டின் சுவர்களை வெறித்துப் பார்க்கிறேன்" என்றார் விஜய் சேதுபதி.

"அதுதான் வேண்டும்" என்றார் ராமச்சந்திரன்.

அடுத்த சில நாட்கள் கழித்து, 'மனிதன்' என்ற கருத்தை அடிப்படையாக வைத்து ராமச்சந்திரனின் ஸ்டூடியோவில் மூன்று மணி நேரங்களுக்கு ஃபோட்டோ ஷூட் ஒன்று நடந்தது. ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் நட்சத்திரம், ஊரடங்கின் போது வீட்டில் எப்படியிருப்பார் என்பதை அடிப்படையாக வைத்துதான் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கான, விளம்பரப் படங்களுக்கான புகைப்படங்களைப் போல இல்லாமல், இந்த புகைப்படங்கள் ஒரு நட்சத்திரத்தின் தினசரி இயல்பைக் காட்டவே முயல்வதாக ராமச்சந்திரன் கூறுகிறார். மேலும் அவரை எந்த விதத்திலும் புகைப்படத்துக்காக போஸ் கொடுக்கச் சொல்லவில்லை என்றும், அவர் வீட்டில் இருப்பது போலவே அப்படியே இயல்பாக இருக்கச் சொல்லியே படம் பிடித்ததாகவும் கூறுகிறார்.

இந்த ஊரடங்கில் சென்னையின் பிரபலமான இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருக்கின்றன என்பதை ராமச்சந்திரன் புகைப்படங்கள் எடுக்கச் சென்ற போதுதான் அவருக்கு இந்த யோசனை வந்திருக்கிறது

"தெருக்களில் இருக்கும் மக்களைக் கவனிக்கும் போது அவர்களிடம் என்னவோ வித்தியாசமாக இருந்தது. தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், வாழ்க்கை மாறிவிட்டதைப் பற்றிப் புலம்பினர். விஜய் சேதுபதி அப்படியான ஒரு உணர்ச்சியைக் காட்ட வேண்டும் என்று விரும்பினேன். அதை அவர் அற்புதமாகச் செய்தார்" என்கிறார் ராமச்சந்திரன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x