Last Updated : 15 Jul, 2020 02:12 PM

 

Published : 15 Jul 2020 02:12 PM
Last Updated : 15 Jul 2020 02:12 PM

ஓடிடி தளத்துக்கான பணிகளில் கமல் மும்முரம்

சென்னை

கரோனா ஊரடங்கில் ஓடிடி தளத்துக்கான பணிகளில் கமல் மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறார்.

கரோனா ஊரடங்கில் கட்சிப் பணிகள், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது, மத்திய அரசின் செயல்பாடுகளைச் சாடுவது எனத் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார் கமல். இதோடு 'தலைவன் இருக்கின்றான்' என்ற பெயரில் இதர பிரபலங்களுடன் கலந்துரையாடியும் வருகிறார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடையே ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருகின்றன. முழுமையாக முடிக்கப்பட்ட படங்களை பல்வேறு ஓடிடி தளங்கள் போட்டியிட்டு வாங்கி வெளியிட்டு வருகின்றன. தமிழில் 'பொன்மகள் வந்தாள்' மற்றும் 'பெண்குயின்' ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளன.

இதற்கிடையே பல ஆண்டுகளுக்கு முன்பே டிடிஹெச்சில் நேரடியாக படங்கள் வெளியீடு தொடர்பாக பேசி சர்ச்சையில் சிக்கினார் கமல்ஹாசன். அதற்குப் பிறகும் கூட டிஜிட்டல் வளர்ச்சியைப் பற்றி பல்வேறு மேடைகளில் பேசினார்.

தற்போது இந்த ஊரடங்கில் ஓடிடி தளத்துக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன். ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான டர்மரிக் மீடியா நிறுவனம் மூலமாக ஓடிடி தளத்துக்கான தயாரிப்பில் ஈடுபடவுள்ளார். டர்மரிக் மீடியாவுடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும் இதில் கைகோத்துள்ளது. இதற்காக கதைகள் கேட்பது, எழுதுவது என்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

வரும் காலத்தில் தனக்கு ஏற்றார்போல் நல்லதொரு கதை அமைந்தால், அதில் நடிப்பதற்கும், இயக்குவதற்கும் கமல் தயாராக இருக்கிறார் என்கிறார்கள். மேலும் 'இந்தியன் 2' பணிகளை முடித்துவிட்டு, விரைவில் ஓடிடி தளத்தில் கமலைக் காண வாய்ப்புள்ளது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x