Published : 13 Jul 2020 05:01 PM
Last Updated : 13 Jul 2020 05:01 PM

''வலியின்றி உயிர் பிரிய பிரார்த்தனை செய்யுங்கள் - இறக்கும் முன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை

மத்தியப் பிரதேசம்

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை திவ்யா சவுஸ்கி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 29.

இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திவ்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவு, தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை, மாடல், பாடகியான திவ்யா சவுஸ்கி மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர். பிரிட்டனில் கல்லூரிப் படிப்பை முடித்து இந்தியா திரும்பியபின் பல்வேறு விளம்பரப் படங்களில் மாடலாக நடித்துள்ளார். அதே நேரம் எண்ணற்ற அழகிப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். பின்னர் எம் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தார். 2016-ம் ஆண்டு "ஹாய் அப்னா தில் தோ ஆவாரா" என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

சால்ஸா மற்றும் கதக் நடனங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்திருந்த திவ்யா, 2018-ம் ஆண்டு ஒரு தனிப் பாடல் வீடியோவை வெளியிட்டார். ஒன்றரை வருடங்களுக்கு முன் திவ்யாவுக்குக் கணையப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை மேற்கொண்டு மீண்டு வந்தாலும், புற்றுநோயின் தாக்கம் மீண்டும் அதே பகுதியில் ஏற்பட, தொடர்ந்து அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார்.

புற்றுநோய் தீவிரமடைந்ததால் பொறுக்க முடியாத வலியில் திவ்யா அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திவ்யா நேற்று உயிரிழ்ந்தார். ஆனால் இறப்பதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு பதிவுகளைப் பகிர்ந்திருந்தார்.

ஜூலை 11 அன்று பகிர்ந்த பதிவில், "நான் சொல்ல விரும்பும் விஷயத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. நான் காணாமல் போய் பல மாதங்கள் ஆகிவிட்டதால் எக்கச்சக்கமான செய்திகள் குவிந்துவிட்டன. இப்போது உங்களிடம் நான் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மரணப் படுக்கையில் இருக்கிறேன். நான் வலிமையாக இருக்கிறேன். அவதியில்லாத இன்னொரு பிறப்பு எனக்குக் கிடைக்கட்டும். தயவுசெய்து கேள்விகள் கேட்க வேண்டாம். நீங்கள் அனைவரும் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். சென்று வருகிறேன்" என்று திவ்யா குறிப்பிட்டுள்ளார்.

அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, "நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். பேசக் கூட முடியாத நிலையில் இருக்கிறேன். புற்றுநோய் என்னைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது. நான் வலியின்றி இறந்து போக பிரார்த்தனை செய்யுங்கள். என்னால் உங்களுக்குப் பதில் சொல்ல முடியாததற்கு மன்னித்து விடுங்கள்" என்று திவ்யா பகிர்ந்துள்ளார்.

இது அவரது ரசிகர்கள் மற்றும் துறை நண்பர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திவ்யாவின் மரணத்தை அவரது உறவினர் உறுதி செய்துள்ளார்.

திவ்யாவின் துறை நண்பர்கள் பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x