Published : 12 Jul 2020 08:18 PM
Last Updated : 12 Jul 2020 08:18 PM

'அலா வைகுந்தபுரம்லோ' படத்துக்குப் புகழாரம் சூட்டியுள்ள பாலிவுட் இயக்குநர்

'அலா வைகுந்தபுரம்லோ' அற்புதமான படம் என்றும், அதை இந்தியில் நேரடியாக வெளியிட வேண்டும் என்றும் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார்.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. தமன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளையும் உடைத்தது. அல்லு அர்ஜுனின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயர் பெற்றது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு முன்னணி நடிகர்கள் பாராட்டுத் தெரிவித்தார்கள். தற்போது கரோனா ஊரடங்கில் ஓடிடி தளத்தில் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டியுள்ளார் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சஞ்சய் குப்தா.

இந்தப் படம் தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் "நெட்ஃப்ளிக்ஸில் தற்போதுதான் 'அலா வைகுந்தபுரம்லோ' பார்த்தேன். என்ன ஒரு படம்! கலப்படமற்ற சுத்தமான பொழுதுபோக்குப் படம். இதைத் திரையரங்கில் பார்க்காமல் விட்டது ஒரு வாழ்நாள் வருத்தமாக இருக்கும். கரோனா அழுத்தத்திலிருந்து விடுபட்டு முடிந்தவரை இந்தப் படத்தை விரைவாகப் பாருங்கள்" என்று தெரிவித்தார் சஞ்சய் குப்தா.

அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அல்லு அர்ஜுன், "மிகவும் நன்றி சஞ்சய் ஜி. உங்களுக்குப் படம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக சஞ்சய் குப்தா, "உங்கள் நடிப்பு என்னை எவ்வளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள் சகோதரா. நீங்கள் என்னை அழவும் சிரிக்கவும் வைத்துள்ளீர்கள். நான் உங்களின் வாழ்நாள் ரசிகன். உங்களோடு பணிபுரியும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சய் குப்தாவின் ட்வீட்களுக்கு விநியோகஸ்தர் ஒருவர், "அற்புதம்! அல்லு அர்ஜுன் தன்னுடைய வசீகரத்தை ஜனரஞ்சகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரிஜினலை ரசித்த மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தி ரீமேக் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக சஞ்சய் குப்தா, "இது ரீமேக் செய்யப்படக் கூடாது. இது மீண்டும் அல்லு அர்ஜுன் நடிப்பிலேயே இந்தியில் வெளியாக வேண்டும். இது ஒரு வாழ்நாள் திரைப்படம். பாலிவுட்டில் இருக்கும் எந்தவொரு நடிகராலும் இதைவிடச் சிறப்பாக நடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சய் குப்தாவின் இந்தப் புகழாரத்தால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x