Last Updated : 12 Jul, 2020 06:10 PM

 

Published : 12 Jul 2020 06:10 PM
Last Updated : 12 Jul 2020 06:10 PM

’’குழந்தையைப் பாராட்டுவது போல் என் முதல் படத்தை பாராட்டினார் கே.பி.சார்’’ - லட்சுமி ராமகிருஷ்ணன் பெருமிதம் 

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

பாலசந்தர் சார்... ஒன் அண்ட் ஒன்லி டைரக்டர். மிகப்பெரிய லெஜண்ட் அவர். அவரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். அவர் இயக்கிய ஒவ்வொரு படங்கள் மூலமாகவும் இன்றைக்கு எங்களையெல்லாம் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். வருங்காலத்தில் வரக்கூடிய எத்தனையோ பேருக்கும் வழிகாட்டியாக பாலசந்தர் சாரின் படங்கள் இருக்கும்.

பாலசந்தர் சாரிடம் எனக்குப் பழக்கமில்லை. நான் இயக்கிய ‘ஆரோகணம்’ படத்தை, விஜி மூலமாக அவருக்குக் காட்டினோம். அவர் ப்ரிவியூ தியேட்டரில் உட்கார்ந்து படத்தை ரசித்துப் பார்த்தார். நான் அவர் பார்ப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பெரிய சீனியர் இயக்குநர் அவர். அது எதுவுமே இல்லாமல், நான் முதன் முதலாக இயக்கிய படத்தை ஆர்வத்துடன் பார்த்தார். ரொம்பவே இன்கரேஜ் செய்தார்.

படம் பார்த்துவிட்டு நேரடியாகப் பாராட்டியதுடன், எனக்கு பாராட்டுக் கடிதமும் எழுதினார். அதை ஃப்ரேம் போட்டு வைத்திருக்கிறேன்.

லோகிததாஸ், பாலுமகேந்திரா, சேதுமாதவன், பாரதிராஜா, பாலசந்தர் சார்... இவர்களெல்லாரும் முதன்முதலில் படம் இயக்கிய என்னை ஊக்குவித்ததை மறக்கவே முடியாது. குழந்தைகள் ஏதாவது ஒருவிஷயம் செய்தால், அவர்களைத் தட்டிக் கொடுத்து ரசிப்போமே... அதுமாதிரி ரசனையோட, பாராட்டு தெரிவித்தார் பாலசந்தர் சார். இது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த பொக்கிஷம். இன்னும் நிறைய படம் பண்ணவேண்டும் என்பதற்கு பாலசந்தர் சாரின் பாராட்டு, ரொம்பவே ஊக்கப்படுத்துகிறது.

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x