Last Updated : 11 Jul, 2020 07:32 PM

 

Published : 11 Jul 2020 07:32 PM
Last Updated : 11 Jul 2020 07:32 PM

சன் டிவியில் ஒளிபரப்பான 'அழகு' உள்ளிட்ட 4 சீரியல்கள் நிறுத்தம்: காரணம் இதுதான்!

சென்னை

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'அழகு', 'கல்யாணப் பரிசு', 'தமிழ்ச்செல்வி', 'சாக்லேட்' உள்ளிட்ட சீரியல்கள் இனி ஒளிபரப்பப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் அரசின் சில ஊரடங்கு தளர்வுகளுடன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரியல் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. ஆனாலும், பல நடிகர்கள்- நடிகைகள் வருகை, ஷூட்டிங்கில் சிரமம் உள்ளிட்ட இடையூறுகளை சேனல் தரப்பினர் இன்றளவும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக, சன் தொலைக்காட்சியில் ரேவதி, ஸ்ருதி உள்ளிட்டோர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த 'அழகு' சீரியல் நிறுத்தம் என சமூக வலைதளம் வழியே நடிகை ஸ்ருதி ராஜ் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சேனல் தரப்பினரிடையே மேலும் விசாரித்தோம்.

''கரோனா வைரஸ் பாதிப்புதான் தற்போதைய இந்தப் பிரச்சினைக்குக் காரணம். சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் மும்பை, கேரளா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து வர வேண்டும். அவர்களின் வருகையில் பிரச்சினை இருந்தது.

அப்படியே வந்தாலும், அவர்களுக்கு கேரவன் பிரச்சினை, படப்பிடிப்பில் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் நிறையச் சிக்கல்கள் எழுந்தன. எப்படிப் பார்த்தாலும் இந்தச் சூழலை சீரியல்கள் தயாரிப்பு குழு எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'அழகு', 'கல்யாணப் பரிசு', 'தமிழ்ச்செல்வி', 'சாக்லேட்' ஆகிய 4 சீரியல்களையும் ஒரே நிறுவனமே தயாரித்து வந்தது.

அந்த சீரியல்களில் நடித்து வந்த பலர் ஷூட்டிங் வர இயலாத காரணத்தால் கதாபாத்திர மாற்றமும் செய்யப்பட்டது. அதுவும் சரிவரப் பொருந்தவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனமும், சேனலும் ஒருங்கிணைந்து தற்போது இந்த சீரியல்களை நிறுத்துவது என முடிவெடுத்துள்ளனர்.

இதற்குப் பதிலாக இரு தரப்பும் இணைந்து வேறு புதிய சீரியல்களைத் தொடங்கலாம் என்றும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. மேலும், சன் டிவியில் 5-க்கும் மேலான புதிய சீரியல்கள் தொடங்க உள்ளன என்றும் கூறப்படுகிறது. எப்படியும், கரோனா பாதிப்பு குறைந்து செப்டம்பர் மாதத்துக்குப் பிறகுதான் நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு தினமும் வருவார்கள். அதுவரை எல்லா சேனல்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கும்!''.

இவ்வாறு சேனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x