’’கே.பி.சார் படங்களில் இருந்து இன்னமும் கத்துக்கிட்டிருக்கேன்!’’ - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்

’’கே.பி.சார் படங்களில் இருந்து இன்னமும் கத்துக்கிட்டிருக்கேன்!’’ - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்

Published on

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

இந்திய அளவில் உள்ள இயக்குநர்களில், மிகப்பெரிய அளவிலான இன்ஸ்பிரேஷன், பாலசந்தர் சார்னுதான் சொல்லுவேன். இன்னமும் அவருடைய படங்களில் இருந்து நிறையக் கத்துக்கிட்டிருக்கேன்.

பாலசந்தர் சார்கிட்ட நான் எப்போதும் வியக்கிற விஷயம் என்னன்னா... ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள்ளே எப்பவுமே அவர் படம் பண்ணினது கிடையாது. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான விஷயங்களை பரீட்சித்துப் பாத்துக்கிட்டே வந்திருக்கார். ’நினைத்தாலே இனிக்கும்’ மாதிரி முழுக்க முழுக்க மியூஸிக்கல் சப்ஜெக்ட் பண்ணினார். ‘தில்லுமுல்லு’ மாதிரி முழு காமெடிப் படமும் பண்ணினார். மாறுபட்ட, சமூகத்தால் ஏற்கவே முடியாத உறவுகளை வைத்துக் கொண்டு, ஏகப்பட்ட படங்கள் செய்திருக்கிறார். இப்படி அவர் படங்கள் ஒவ்வொன்றுமே பாடங்கள்னுதான் சொல்லணும்.

எனக்கு அவர் படங்களில் மிகவும் பிடித்தது ‘தில்லுமுல்லு’. அவர் படங்களில் உள்ள பாடல்களில் ரொம்பப் பிடித்த பாடல் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் வரும் ‘ஜகமே தந்திரம்’. என்னுடைய படத்துக்குக் கூட அந்தப் பாட்டில் வரும் இந்த வரியைத்தான் தலைப்பாக வைத்திருக்கிறேன்.

இவ்வாறு கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in