Last Updated : 10 Jul, 2020 05:05 PM

 

Published : 10 Jul 2020 05:05 PM
Last Updated : 10 Jul 2020 05:05 PM

’’என் உணவுத்தட்டில் பாலசந்தர் சார் முகம்தான் தெரியும்!’’ - நடிகர் விவேக் உருக்கம்

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் நடிகர் விவேக் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

எங்கள் இயக்குநர் சிகரம், குருநாதர் பாலசந்தர் சாருக்கு 90வது பிறந்தநாள். பல சாதனைகளை, கதைகளிலும் சரி, திரைக்கதைகளிலும் சரி, வசனங்களிலும் சரி, இயக்கத்திலும் சரி... முத்திரை பதித்தவர் எங்கள் இயக்குநர் கே.பி. சார் அவர்கள்.

நடிகர்திலகம், புரட்சித்தலைவர் ஆகியோரோடு பணியாற்றிவிட்டு, பிறகு ஒரு உலகநாயகனைக் கண்டறிந்து செப்பனிட்டார். சூப்பர் ஸ்டாரை உருவாக்கினார். நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார். என்னையும் அறிமுகப்படுத்தினார். எனக்குப் பிறகு இன்னும் எத்தனையோ பேரை அறிமுகப்படுத்தினார். அவர் திரையுலக ஆசான்.
இயக்குநர் ஸ்ரீதருக்குப் பிறகு, வடக்கில் இருந்து தெற்கைப் பார்த்து, ‘என்னய்யா, இவ்ளோ பிரமாதமா படம் எடுக்கிறாங்க?’ என்று ‘ஏக் துஜே கேலியே’ படத்தைப் பார்த்து வியந்தார்கள். இந்தப் படம்தான் காதலர்களுக்கான வேதம். இப்போது இந்தப்படத்தைப் பார்த்தாலும், எவ்வளவு யூஸ்ஃபுல்லாகவும், தெளிவாகவும் அழகாகவும் படம் பண்ணியிருக்கிறார் என்பது தெரியும். அதுதான் கே.பி.சார்.

நான் மட்டுமில்ல... பெரும்பாலும் பாலசந்தர் சாரின் அறிமுகங்கள் சோடை போனதே இல்லை. அவருடைய அசாத்தியமான திறமையை எங்களுக்குள் கடத்திவிடுவார். எங்களிடம் இருக்கும் திறமையை தெரிந்துகொண்டு, அதை இன்னும் மேம்படுத்துவார்.

அவர் உடல் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அவரின் ஆத்மா எங்களை வழிநடத்திக்கொண்டுதான் இருக்கும். பாலசந்தர் சார் கிரேட். நான் அடிக்கடி சொல்லுவேன்... கண்ணாடியைப் பார்த்தால், என்னுடைய முகம் தெரியும். என் உணவுத்தட்டைப் பார்த்தால், அதில் எப்போதுமே பாலசந்தர் சார் முகம்தான் தெரியும். எல்லாவற்றுக்கும் அவர்தான் காரணம்.

தொடர்ந்து, கலையுலகப் பயணத்தில் பாலசந்தர் சாரின் ஆத்மா, என்னுடன் துணை நிற்கும்.


இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x