Last Updated : 10 Jul, 2020 05:05 PM

 

Published : 10 Jul 2020 05:05 PM
Last Updated : 10 Jul 2020 05:05 PM

’’பாலசந்தரின் வசனங்கள் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு’’ - இசைக்கலைஞர் ரமேஷ் விநாயகம் புகழாரம்

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் இசைக்கலைஞர் ரமேஷ் விநாயகம் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

ரமேஷ் விநாயகம் தெரிவித்ததாவது:

ஒன் அண்ட் ஒன்லி பாலசந்தர் சார். அவருடைய 90வது பிறந்தநாளில், நானும் கலந்துகொண்டு, அவரைப் பற்றிப் பேசுகிறேன் என்று நினைக்கும் போதே, பெருமையாக இருக்கிறது. மிகப்பெரிய கிரியேட்டர் அவர். நடக்கவே நடக்க முடியாத விஷயங்களையெல்லாம் திரையில் கொண்டுவந்து, அதையெல்லாம் மிக இயல்பாகக் காட்டியவர். அழகிய கதைக்களமாக ஆக்கக்கூடியவர்.

அதேபோல, ஒரு ஸ்ட்ராங்கான கேரக்டரை வைத்துக் கொண்டு, கதையில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களிலும் ஒரு சூழலை ஏற்படுத்தி, அந்த கேரக்டரின் தாக்கம், எல்லா கதாபாத்திரங்களுக்குள்ளேயும் தாக்குவது போல், கதை பண்ணுவார். அப்படியொரு அற்புதமான டைரக்டர்.

இப்படித்தான் நடக்கும் என்றோ, என்ன நடக்கப் போகிறது என்றோ நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது யோசிக்கும் போதே, அதற்கு முற்றிலும் வேறுவிதமான, மாறுபட்ட க்ளைமாக்ஸைக் கொடுக்கக் கூடியவர் பாலசந்தர் சார். அப்படியே புரட்டி மாற்றுகிற க்ளைமாக்ஸ் நடப்பதற்கு, ஒரு காரணத்தையும் மிக அழகாகச் சொல்லுவதிலும் உணர்த்துவதிலும் ஏற்கவைப்பதிலும் மிகச் சிறந்த படைப்பாளியாக உயர்ந்து நிற்கிறார் அவர்.

’அரங்கேற்றம்’ படத்தில் பிரமிளாவுக்கு ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்று நினைக்கும் வேளையில், வேறொரு முடிவைக் கொடுத்திருப்பார். ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் கமலும் ஸ்ரீவித்யாவும் சேர்ந்துவிடுவார்கள் என்பதாக நம்மை நினைக்க வைத்திருப்பார். க்ளைமாக்ஸில், வேறொன்றைச் செய்திருப்பார். அப்படியொரு விஷயத்தை நம்பும்படியாக கொடுப்பதில் ஜீனியஸ் பாலசந்தர் சார்.

இயக்கத்தில் மட்டுமல்ல... அவரின் எழுத்துகளும் சிறப்பானவை. நல்ல ரைட்டர் அவர். படத்தின் கதாபாத்திரங்கள் என்ன சொல்லவேண்டுமோ, எப்படிச் சொல்லவேண்டுமோ அதை ஆணித்தரமாகச் சொல்லுவார். வசனங்களெல்லாம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக இருக்கும். மிகச் சிறந்த இயக்குநர் அவர். இமயத்தின் சிகரம், இயக்குநர் சிகரம், எங்களின் சிகரம் பாலசந்தர் சார்.

இவ்வாறு ரமேஷ் விநாயகம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x