Last Updated : 09 Jul, 2020 06:55 PM

 

Published : 09 Jul 2020 06:55 PM
Last Updated : 09 Jul 2020 06:55 PM

’’பாலசந்தர் படங்களின் ஒவ்வொரு ஷாட்டும் பாடம்!’’ - இயக்குநர் மனோபாலா புகழாரம் 

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு இன்று (ஜூலை 9) 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் நடிகரும் இயக்குநருமான மனோபாலா வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் மனோபாலா கூறியிருப்பதாவது :

"கே.பாலசந்தர் சார் படங்களைப் பார்த்து, சினிமாத்துறைக்கு ஓடிவந்தவர்கள் பலபேர். இவர்களில் நானும் ஒருவன். அவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய பாதிப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தும். சினிமாவை நேசிக்கிற ஒவ்வொருவரும் தயவுசெய்து, பாலசந்தரின் படங்களை கவனமாகப் பாருங்கள். முழுவதுமாகப் பாருங்கள். ஒவ்வொரு படத்தையும் அனலைஸ் பண்ணுங்கள். ஏன் இந்த ஷாட்டை வைத்தார், எதற்காக வைத்தார் என்பதெல்லாம் புரியும். நாளை நீங்கள் சினிமாத் துறைக்கு வரும்போது, அவையெல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்களுக்கு. பெரிய பாடமாக இருக்கும். பாலசந்தர் மிகப்பெரிய மேதை.

அவர் ஊரை ஒட்டிய ஊரில் நான் பிறந்தவன் என்பதாலேயே, அவர் மீது எனக்கு அதிக உரிமையும் பாசமும் உண்டு. உண்மையிலேயே, பாலசந்தர் சார் படங்கள், மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். படங்களைப் பார்க்கவும் கொடுத்து வைக்கவேண்டும். அவரிடம் பேசுவதும் அவரைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதும் அவ்வளவு நன்றாக இருக்கும்.

அவரைப் பற்றி நான் என்ன சொல்வது? அதற்கு எனக்கு தகுதியில்லை. தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். பாலசந்தர் சாரிடம் இருக்கும் நல்ல விஷயம் என்ன தெரியுமா? ஒரு நல்ல படத்தைப் பார்த்துவிட்டாரென்றால், உடனே சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு போன் செய்து பாராட்டுவார். ஒரு வாழ்த்துக்கடிதமும் அனுப்பிவைப்பார். அந்த பெரிய குணம் என்னை பிரமிக்கவைக்கும். அவரிடம் இருந்துதான் இதைக் கற்றுக் கொண்டேன். உண்மையிலேயே, பாலசந்தர் சார் மாதிரி ஒரு இயக்குநரைப் பார்க்கமுடியாது.

அவர் படத்தில், பாடல்களை எடுத்துக் கொண்டால், ’அபூர்வ ராகங்கள்’ படத்தில், ‘கேள்வியின் நாயகனே’ பாட்டு ரொம்பவே பிடிக்கும். இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த ஷாட்டில் நடிப்பதற்காக, ரஜினி சார், என் ரூமிலிருந்து கிளம்பிச் சென்று நடித்தார். பாரதிய வித்யா பவனில்தான் அந்தக் காட்சி எடுத்தார்கள்.

மொத்த கேரக்டருக்கும் ஒரு பாட்டு மூலமாகவே, ஒரு தீர்வு சொல்லமுடியுமா? பாலசந்தர் சார் சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் பாடல். முறையற்ற உறவையும் சிக்கலையும் சொல்லியிருப்பார். கொஞ்சம் பிசகினாலும் ஆபாசமாகிவிடும். அற்புதமாகக் கையாண்டிருப்பார்.

இவ்வாறு மனோபாலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x