Published : 07 Jul 2020 09:44 PM
Last Updated : 07 Jul 2020 09:44 PM

ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி

சென்னை

ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை என்றும், அதுவொரு பெரிய ஜெயில் என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள நடிகர்களில் நாயகன், வில்லன், முதன்மைக் கதாபாத்திரம் என அனைத்திலும் நடிக்கும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே ரஜினி, சிரஞ்சீவி, விஜய், ஆமிர் கான் உள்ளிட்டவர்கள் நடித்த, நடிக்கும் படங்களில் வில்லனாகவும், முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துவிட்டார். இதை இன்றைய சூழலில் மற்ற நடிகர்களிடம் காண முடியாது.

ஏனென்றால், ஹீரோ என்று முடிவெடுத்துவிட்டால் அதில் மட்டுமே பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் நாயகனாக வளர்ந்து வரும் சமயத்தில் 'ஆரஞ்சு மிட்டாய்' என்ற படத்தில் முதியவராக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் விஜய் சேதுபதி. இந்தக் கரோனா ஊரடங்கில் அளித்த நேரலைப் பேட்டியொன்றில் ஹீரோ இமேஜ் குறித்துப் பேசியுள்ளார்.

அதில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:

" 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தில் ஜே.பி.சார்தான் நடிப்பதாக இருந்தது. அவர் வேறொரு படத்தில் மாட்டிக் கொண்டதால் அவரால் வர இயலவில்லை. நண்பர் பண முதலீடு செய்திருந்தார். படத்துக்கு நான்தான் வசனம். இயக்குநரோடு சேர்ந்து திரைக்கதை வேறு அமைத்திருந்தேன். அந்தக் கதை பற்றி முழுமையாகத் தெரியும் என்பதால், இறுதியில் இயக்குநரிடம் "மேக்கப் போட்டுப் பார்க்கலாம். சரியாக இருந்தால் பண்ணலாம்" என்று திட்டமிட்டோம். அப்படி மேக்கப் போட்டுப் பார்த்தபோது, அனைவருக்குமே பிடித்திருந்தது. அதனால் நடித்தேன்.

ஹீரோவாக ஆவதற்கு முன்பு தெருவில் யாருக்குமே தெரியாத ஒருவராகத்தான் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்புறம் நடிகரானேன். ஆகையால், ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை. அந்த இமேஜுக்குள் சிக்கினால் வெளியே வரவே முடியாது. அதுவொரு பெரிய ஜெயில்.

அதில் சிக்காமல் இருக்க 'சூது கவ்வும்' படம்தான் முதல் படி. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்காதீர்கள் என்று பலரும் சொன்னார்கள். நான்தான் என்னை இமேஜுக்குள் அடைக்கக் கூடாது என்று பண்ணினேன். ஏன் இப்போது வரை கூட நிறைய வெவ்வேறு கதாபாத்திரங்கள் பண்ணாதீர்கள் என்பார்கள். மார்க்கெட் நிலையாக இருக்காது என்றும் கூறுவார்கள். அந்த மார்க்கெட்டிற்காக பண்ணக்கூடாது என நினைக்கிறேன். ஏனென்றால் அது தானாக உருவாகிவிடும்".

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x