Last Updated : 30 Jun, 2020 06:39 PM

 

Published : 30 Jun 2020 06:39 PM
Last Updated : 30 Jun 2020 06:39 PM

’’சொன்ன வார்த்தையைக் காப்பாத்தணும்; அதான் ‘அந்த 7 நாட்கள்’ பண்ணிக் கொடுத்தேன்’’ - மகன் சாந்தனுவுக்கு பாக்யராஜ் அட்வைஸ்

’’சொன்ன வார்த்தையைக் காப்பாத்தணும். அது ரொம்ப முக்கியம். அதுதான் வாழ்க்கை முழுக்க நமக்கு நல்ல பேரைக் கொடுக்கும். ‘அந்த 7 நாட்கள்’ தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணிக் கொடுத்ததுக்கு காரணமும் அதுதான்’’ என்று மகன் சாந்தனுவிடம் விவரித்தார் பாக்யராஜ்.

டேட் சன் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜை, அவரின் மகன் சாந்தனு பேட்டி எடுத்தார். மிக நீண்ட உரையாடல் கலந்த பேட்டி. சுவாரஸ்யம் நிறைந்த பேட்டியில் சாந்தனு கேட்ட கேள்விகளும் பாக்யராஜ் அளித்த பதில்களும்: .

‘’அப்பா. நீங்க பெரிய ஸ்கிரிப்ட் ரைட்டர். நல்ல நடிகர். பிரமாதமான டைரக்டர். இசையமைப்பாளர். இப்படி நிறைய சொல்லலாம். எல்லாரும் அப்படிச் சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. இந்த சினிமாவையெல்லாம் தாண்டி, சினிமாவே இல்லாம, நான் உங்களை பெருமையா, சூப்பரான அப்பான்னு சொல்லிக்கிறதுக்கு என்ன விஷயம் இருக்குன்னு நினைக்கிறீங்க?’’ என்று சாந்தனு கேள்வி எழுப்பினார்.

அதற்கு பாக்யராஜ் பதில் அளித்ததாவது;

‘’கொடுத்த வார்த்தையைக் காப்பாத்தணுங்கறதுல நான் எப்பவுமே உறுதியா இருப்பேன். ஒரு படம் செய்றதுக்கு ஒத்துக்கிட்டேன். ‘அந்த 7 நாட்கள்’ கம்பெனி இருக்கு இல்லியா? அது சாதாரணக் கம்பெனிதான். படத்தோட தயாரிப்பாளர்கள் அக்கவுண்டண்ட். நாச்சியப்பன், ஜெயராமன்னு ரெண்டுபேரு. ஏ.எல்.எஸ்.ல அக்கவுண்டண்ட்.. அவங்களுக்கு நான் படம் பண்றேன்னு ஒத்துக்கிட்டேன். அந்த சமயத்துல நடுவுல திடீர்னு ‘இன்று போய் நாளை வா’ புரொட்யூஸர் வந்து நுழைஞ்சாரு. ரிஷாத் கிரியேஷன்ஸ் பர்வேஷ் டி டெக்ரானி . அவரும் வந்து புகுந்துட்டாரு. படம் பண்ணச் சொல்லி கேட்டாரு.

‘மன்னிக்கணும்ங்க. நான் அவங்களுக்கு வாக்கு கொடுத்துட்டேன். அவங்களுக்குச் செஞ்சு முடிச்ச பிறகுதான் எதுவா இருந்தாலும் செய்யமுடியும். நடுவுல செய்யமுடியாதுன்னு’னு சொன்னேன்.

உடனே அவர், ’இந்த சூட்கேஸ்ல எவ்ளோ லட்சம் பணம் கொண்டு வந்திருக்கேன் தெரியுமா. ஒத்துக்கங்க’ன்னு வந்து கேட்டாரு. ’சூட்கேஸ் வைச்சிருந்தாலும் என்னை மன்னிச்சிருங்க. நான் அவங்களுக்குப் படம் பண்றேன்னு வாக்கு கொடுத்துட்டேன். தப்பா நினைக்காதீங்க’ன்னு சொல்லிட்டேன்.

ரெண்டுநாள்... என்னைச் சுத்திச் சுத்தி வந்துட்டே இருந்தார். நான் சம்மதிக்கவே இல்ல. உடனே அவரு, போய் பிரவீணாவை பிடிச்சிட்டாரு. ‘என்னங்க உங்க வீட்டுக்காரரு. உலகம் புரியாதவரா இருக்காரு. நீங்க வாடகை வீட்ல கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கீங்க. இந்தப் பணத்தை வாங்கிக்கிட்டு, ஒரு வீட்டைப் பாத்து அட்வான்ஸ் கொடுத்து, வீடு வாங்கிடலாம். ஆனா இதையெல்லாம் விட்டுட்டு, ஏன் இப்படிப் பண்ணிக்கிட்டிருக்காரு பாக்யராஜ்’னு சொன்னாங்க.
‘எத்தனை நாளா நடக்குது இது’ன்னு பிரவீணா கேட்டாப்ல. ‘ரெண்டுநாளா நாங்களும் பாக்யராஜை சுத்திச் சுத்தி வந்துக்கிட்டிருக்கோம். ஒத்துக்கவே இல்ல’ன்னு சொன்னாங்க. ‘சரி, கொடுங்க, நான் பேசிக்கிறேன்’னு பணத்தை வாங்கிகிட்டாங்க.

அப்புறம், நாச்சியப்பனைக் கூப்பிட்டு, ’’இங்கே பாருங்க, உங்களால பெரிய சம்பளம்லாம் தரமுடியாது. ரெண்டாவது... உங்களுக்கு படம் பண்ணித் தரேன்னு வார்த்தை கொடுத்தாரு. அதுக்காக ஒத்துக்கிட்டாரு. அட்வான்ஸ்னு பெரிய தொகையாவும் கொடுக்கல. இப்போ, நீங்க பாத்து ஓகேன்னு சொல்லிட்டீங்கன்னா, எங்களுக்கு சொந்த வீடு கிடைச்சிரும். அதனால, அவங்களுக்கு முதல்ல படம் பண்ணிக் கொடுக்கட்டும். அடுத்தாப்ல உங்களுக்குப் படம் பண்ணிக் கொடுப்பாரு. ப்ளீஸ்... நீங்கதான் விட்டுக் கொடுக்கணும். சூழ்நிலையைப் புரிஞ்சுக்கங்க’ன்னு பிரவீணா, அவங்ககிட்ட சொன்னாங்க.

உடனே அவங்க, ‘புரியுதும்மா. நாங்க பெரிய அட்வான்ஸ்லாம் கொடுக்கல. அவரு அஸிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும் போது, படம் பண்ணித் தரேன்னு சொன்னார். இப்போ சக்ஸஸ் டைரக்டராயிட்டாரு. அதனால வந்து கேட்டோம். அவரு அதையெல்லாம் மறக்காம எங்களுக்குச் செய்றதே பெருசும்மா. அதனால, வீடெல்லாம் வாங்கறதா சொல்றீங்க. வீடு வாங்குங்க. அவங்களுக்குப் படம் பண்ணிக் கொடுங்க. அதுக்கு அப்புறமா, எங்களுக்கு படம் பண்ணிக் கொடுக்கட்டும்மா’ன்னு நாச்சியப்பனும் ஜெயராமனும் சொன்னாங்க.

வீட்டுக்கு வந்தேன். அப்படியே உல்டாவாச்சு. நான் முடியவே முடியாதுன்னு சொன்னேன். ஆனா, ‘அவங்ககிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டேன். இவங்ககிட்ட சொல்லிட்டேன். ஒத்துக்கிட்டாங்க’ன்னெல்லாம் பிரவீணா சொன்னாப்ல. ’அந்த 7 நாட்கள்’ புரொட்யூசரும் வந்துட்டாரு. ‘அவங்க சொல்றதுதான் கரெக்ட் சார். நீங்க முதல்ல வீடு வாங்குங்க. அவங்களுக்கே படம் பண்ணுங்க. அடுத்தாப்ல எங்களுக்குப் பண்ணிக் கொடுங்க சார்’னு சொன்னார்.

அதனால ’இன்று போய் நாளை வா’ பண்ணினேன். அப்புறம், நாச்சியப்பன், ஜெயராமனுக்கு ‘அந்த 7 நாட்கள்’ பண்ணினேன்.

இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, சொன்ன வார்த்தையைக் காப்பாத்தணுங்கறதுல எப்பவுமே உறுதியா இருக்கணும். வாழ்க்கைல, ஒரு வார்த்தை சொன்னா அதைக் காப்பாத்தணும். அப்படிக் காப்பாத்தறதுக்கு உறுதியா இருக்கணும். ‘இவரு சொன்னா... சொன்ன வார்த்தையைக் காப்பாத்துவாருப்பா’ங்கற மரியாதை ரொம்ப ரொம்ப முக்கியம்.

முதல் பட வாய்ப்பு. பிளாங்க் செக் கொடுத்தாலும் கூட, குருநாதர் ஏதோவொரு வகைல, காயப்பட்டிருக்காரு. நம்மளை தப்பா நினைச்சிக்கிட்டாரு, அவருக்கு துரோகம் பண்ணின மாதிரி ஆயிரும்னு அதை ஒத்துக்கல. பிளாங்க் செக்கை திருப்பிக் கொடுத்தேன்.

அதேபோல, சொன்ன வார்த்தையைக் காப்பாத்தறதுக்காக படம் பண்ணிக் கொடுத்தேன்.

இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, நீயும் உன் வாழ்க்கைல சொன்ன சொல்லக் காப்பாத்தணும். அப்படி நடந்துக்கணும். சக்ஸஸ் கொடுக்கறதெல்லாம் அடுத்த விஷயம். ஆனா உன் கேரக்டர் இப்படி இருக்குதுங்கறதுதான், முக்கியம். இதுதான் லைஃப்ல, எது போனாலும் பேசப்படுறதா இருக்கும்.
நீ கேட்டதால இதையெல்லாம் சொன்னேன்’’ என்று உணர்ச்சிப் பொங்க தெரிவித்தார் கே.பாக்யராஜ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x