Published : 30 Jun 2020 12:27 PM
Last Updated : 30 Jun 2020 12:27 PM

ஓடிடி தளத்தில் வெளியாகிறதா 'சக்ரா'?- படக்குழு மறுப்பு

'சக்ரா' படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவலுக்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்தனர்.

புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்ரா'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டும் சில நாட்கள் பாக்கியுள்ளது. மற்ற அனைத்துப் பணிகளுமே முடிந்துவிட்டன.

இந்தக் கரோனா ஊரடங்கில் அனைவருமே படம் குறித்த தகவல்கள், டீஸர், ட்ரெய்லர் என வெளியிடத் தயங்கிய நேரத்தில், விஷால் 'சக்ரா' படத்தின் ட்ரெய்லரை 4 மொழிகளில் வெளியிட்டார். இந்த ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பலரும் 'இரும்புத்திரை' பாணியில் இருப்பதாக கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, கரோனா ஊரடங்கு சமயத்தில் 'சக்ரா' ட்ரெய்லரை வெளியிட்டவுடன் பலரும் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது என்று செய்திகளைப் பரப்பினார்கள். இது தொடர்பாக விசாரித்தபோது, "'சக்ரா' படம் திரையரங்கில்தான் வெளியாகும். இயக்குநரே இன்னும் ஒரு வார படப்பிடிப்பு இருப்பதாக பேட்டியளித்துள்ளார். ஆகையால் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை.

அனைவரும் வீட்டில் இருக்கும் இந்தத் தருணத்தில் ட்ரெய்லரை வெளியிட்டால், பலரும் பார்ப்பார்கள். ஒரு எதிர்பார்ப்பு உருவாகும் என்ற எண்ணத்தில்தான் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது" என்று தெரிவித்தார்கள். இதன் மூலம் திரையரங்கில் 'சக்ரா' வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x