Published : 28 Jun 2020 07:42 PM
Last Updated : 28 Jun 2020 07:42 PM

ஜானகி அம்மா நலமுடன் இருக்கிறார்: மகன் முரளி கிருஷ்ணா

ஜானகி அம்மா நலமுடன் இருப்பதாக அவரது மகன் முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்' என்று செல்லமாக அழைக்கப்படுபவர். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என இவர் அடைந்த பெருமைகள் ஏராளம்.

2013-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கம் பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், இது தனக்கு தாமதமானது என்று நிராகரித்துவிட்டார் ஜானகி. 2016-ம் ஆண்டு தான் திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்து, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வாழ்த்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்னதாக, இவரது உடல்நலம் குறித்து வதந்தி உருவானது. அதற்கு அவரும், அவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, இன்று (ஜூன் 28) மதியம் முதலே ஜானகி குறித்து மீண்டும் வதந்தி உருவானது. இதனால் சமூக வலைதளத்தில் பரபரப்பு உண்டானது.

இது தொடர்பாக அவரது மகன் முரளி கிருஷ்ணா, ஜானகி அம்மாவுக்கு ஒரு சின்ன அறுவை சிகிச்சை நடைபெற்று, மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தாய் குறித்து அடிக்கடி பரவி வரும் வதந்தி குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தீனா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் "எஸ்.ஜானகி அம்மா தவறிவிட்டதாக தவறான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது தான் எஸ்.பி.பி அண்ணாவிடம் பேசினேன். அவர் உடனே ஜானகி அம்மா குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசினார். ஜானகி அம்மா நல்ல சிரித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார். எந்தவித பயமும் இல்லை. ஆகையால் எந்தவொரு தவறான தகவலையும் பரப்பாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x