Published : 24 Jun 2020 08:02 PM
Last Updated : 24 Jun 2020 08:02 PM

அந்தத் தவறைச் செய்திருக்கக் கூடாது: விஜய்யிடம் வருத்தம் தெரிவிக்கும் சேரன்

சென்னை

விஜய் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது, முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

ஜூன் 22-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். இந்த முறை கரோனா அச்சுறுத்தலால், கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், அவர்கள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டும் வழங்கினார்கள்.

விஜய் பிறந்த நாளன்று சமூக வலைதளத்தில் விஜய் தொடர்பான ஹேஷ்டேகுகள், விஜய் குறித்த தகவல்கள் எனப் பலருமே பகிர்ந்து வந்தார்கள். இதில் ஜெயா தொலைக்காட்சியில் 'ஆட்டோகிராஃப்' படம் தொடர்பாக விஜய் பேசியது குறித்த வீடியோ ஒன்றை, இயக்குநர் சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வெளியிட்டனர்.

அந்த வீடியோவுக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

”பிரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய பாராட்டியதை மறக்க முடியாது. அதற்குப் பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒப்புக்கொண்டார். நான்தான் 'தவமாய் தவமிருந்து' படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.

அந்தத் தவறை நான் செய்திருக்கக் கூடாது. இந்தத் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன். இந்தத் தவறுக்கான வருத்தத்தை விஜய்யைப் பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன். ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.

அவரிடம் 'ஆட்டோகிராஃப்' கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்தத் தன்மை.. வாவ்... கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான்...அவ்வளவு டெடிகேஷன்... அதுவே இன்று அவரின் உயரம்”.

இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x