Published : 24 Jun 2020 04:55 PM
Last Updated : 24 Jun 2020 04:55 PM

பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மருத்துவமனையில் அனுமதி

மும்பை

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று மூச்சுத் திணறல் இருப்பதாக சரோஜ் கான் கூறியதையடுத்து அவர் உடனடியாக பாந்த்ராவில் இருக்கும் குருநானக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது சரோஜ் கான் வேகமாகக் குணமடைந்து வருவதாகவும், இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சரோஜ் கானை நலம் விசாரித்துள்ள 'ஃபனா', 'ஹம் தும்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் குணால் கோலி, அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சரோஜ் கானின் மகன் ராஜு கானிடம் பேசியதாகவும், அம்மா நலமாக இருப்பதாக அவர் கூறியதாகவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 40 வருடங்களாக நடன இயக்குநராக இருக்கும் சரோஜ் கான், 2000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இதில் ஒரு விருது, தமிழில் 'சிருங்காரம்' என்ற படத்தில் நடன இயக்கம் செய்ததற்காக வென்றது குறிப்பிடத்தக்கது. நடன இயக்கத்துக்காக அதிக முறை தேசிய விருது பெற்றுள்ள ஒரே நபர் இவர்தான்.

'தேவ்தாஸ்', 'ஜப் வீட் மெட்', 'குரு', 'ஃபனா', 'டெல்லி 6', 'மணிகார்னிகா' உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் சரோஜ் கான் பணியாற்றியுள்ளார். கடைசியாக 'கலங்' திரைப்படத்தில் மாதுரி தீக்‌ஷித்தின் பாடலுக்கு நடன இயக்கம் செய்தார். தமிழில் 'தாய் வீடு', 'இருவர்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x