Last Updated : 24 Jun, 2020 03:20 PM

 

Published : 24 Jun 2020 03:20 PM
Last Updated : 24 Jun 2020 03:20 PM

’முருங்கைக்காய் சமாச்சாரம் உண்மையா?’, ‘என்னை வியக்கவைத்த மணிரத்னம், லோகேஷ் கனகராஜ்’ - மனம் திறந்த கே.பாக்யராஜ் 

’டேட் சன் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜை, அவரின் மகன் சாந்தனு பேட்டி எடுத்தார்.

அந்தப் பேட்டியில் சாந்தனு கேட்ட கேள்விகளும் பாக்யராஜ் அளித்த பதில்களும் :

‘அப்பாகிட்ட கேள்வி ஏதாவது இருந்தா அனுப்புங்கன்னு டிவிட்டர் போட்டேன். அதுல நிறைய பேர் கேள்விகள் அனுப்பிச்சிருக்காங்க. அந்தக் கேள்விகளைத்தான் இப்போ கேக்கப் போறேன்’ என்றார் சாந்தனு.

’’இந்தியாவிலேயே மிகச்சிறந்த திரைக்கதையாளர் என்று பேரெடுத்திருக்கிறீர்கள். இன்றைய காலகட்டத்தில், நீங்கள் வியந்த திரைக்கதையாளர் என்று யாரைச் சொல்லுவீர்கள்?’’

‘’ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமா பண்றாங்க. அவங்கவங்க, ஒருபாணின்னு வைச்சிட்டிருக்காங்க. ரொம்ப ஈடுபாட்டோட பண்றதுன்னு பாத்தா... மணிரத்னம் படத்துல, நிறைய காட்சிகள் பாத்துட்டு, ‘அட’ அப்படின்னு நான் ஆச்சரியப்பட்டுப் போயிருக்கேன். ‘பம்பாய்’ படத்துல அப்படிப் பண்ணிருப்பார். ஹீரோயின் அறிமுகக் காட்சி. அப்ப, ஏதாவது வித்தியாசமா காட்டினா நல்லாருக்கும்.
ஹீரோயின் முஸ்லீம். பர்தா போட்டு முகம் மூடியிருப்பாங்க. அரவிந்த்சாமி பாப்பார். அப்போ, திடீர்னு காத்தடிக்கும். அப்போ பர்தா விலகும். முகம் தெரியும். ஏ.ஆர்.ரஹ்மான் அந்த இடத்துக்கு மியூஸிக் போட்டிருப்பார். முகத்தைப் பாத்ததும் அதுல அரவிந்த்சாமி லவ் பண்ண ஆரம்பிக்கிறார்னதுமே நமக்கே சில்லுன்னு இருக்கும்.

அதேபடத்துல இன்னொரு சீன். அவங்க அப்பா பயங்கரக் கோபக்காரர். விஷயம் தெரிஞ்சு என்னாகுமோன்னு இருக்கும் போது, அதுக்கெல்லாம் டைமிங்கே கொடுக்காம, அடுத்த சீன் வைச்சிருப்பார். நேரா அரவிந்த்சாமி போவார். ‘உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்’னு சொல்லுவார். ’உங்க பொண்ணை லவ் பண்றேன்’னு சொல்லுவார். உடனே தடக்குன்னு காலால எட்டி சேரை உதைப்பாரு அப்பா கேரக்டரு. நமக்கு ஒருமாதிரி ஆயிரும். எவ்ளோ பெரிய விஷயத்தை, எவ்ளோ ஈஸியா, சுலபமா, ஆடியன்ஸுக்கு காட்டிடுறாரு மணிரத்னம். இதுமாதிரி மணிரத்னத்துக்கிட்ட நிறைய விஷயங்கள் ரசிப்பேன்.

இப்போ, அப்படி நான் ரொம்பவே ரசிச்சது... லோகேஷ் கனகராஜ் படம். கார்த்தியை வைச்சு ‘கைதி’ படம் பண்ணிருந்தார். ஒரு ஸாங் இல்லாம, லவ் ஸாங் இல்லாம, காமெடிக்குன்னு டிராக் வைக்காம, பெரிய நடிகர்கள்னு துணை கேரக்டர்களுக்கு யாரையும் வைச்சுக்காம, எவ்ளோ டைட்டா, ஒரு இங்கிலீஷ் படத்துக்கு உண்டான ஸ்கிரிப்ட் மாதிரி, ஒருநாள்ல நடக்கிற மாதிரி, ஒரு கதையைக் கொண்டு வந்து, அழகாப் பண்ணிருந்தாரு லோகேஷ் கனகராஜ்.

அந்தப் படத்துல சீன்ஸ் ரொம்பக் கம்மிதான். மத்தபடி டேக்கிங்தான். ஆனாலும் டேக்கிங்ல படத்தை ’கிரிப்’பா கொண்டுபோனார்.

நான் பார்த்து வியந்த படம் ‘ஸ்பீடு’. இதுல மொத்தமே அஞ்சு சீனோ ஆறு சீனோதான். அந்தமாதிரி பிரமாதமா பண்ணிருந்தார் லோகேஷ் கனகராஜ். அவரோட முந்தைய படம் ‘மாநகரம்’ படமும் பாத்தேன். அதுல லேடீஸ், அந்தக் கேரக்டர், இந்தக் கேரக்டர்னு வைச்சிக்கிட்டு, காமெடிலாம் சேர்த்துக்கிட்டுப் பண்ணினார். இது மொத்தமாவே வித்தியாசமா இருந்துச்சு. சமீபத்துல, நான் பார்த்து வியந்ததுன்னா... அது ‘கைதி’ படம். லோகேஷ் கனகராஜ் படம்’’ என்று விவரித்தார் பாக்யராஜ்.

‘’சரி அடுத்த கேள்வி... முருங்கைக் காய் சீன். இந்தக் காட்சியை எடுக்கும்போதே, இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்த்தீங்களா? எனக்கும் ஒரு டவுட்டு. உண்மையிலேயே, முருங்கைக்காய்ல அப்படியொரு சக்தி இருக்கா, இல்லியா?’ இல்ல... நீங்களே சும்மா அடிச்சு விட்டீங்களா?’’

‘’இல்லப்பா... அதுமாதிரிலாம் அடிச்சுவிடமுடியாது. கடவுள் மேல சத்தியமா சொல்றேன். முருங்கைக்காய் சமாச்சாரம் உண்மைதான். என்னோட அம்மாவோட அம்மா, என் பாட்டி வீட்ல எல்லாருக்கும் சாப்பாடு போடுவாங்க. எங்க மாமாலாம் சாப்பிட உக்கார்ந்திருப்பார். அப்போ, மட்டனோ சிக்கனோ பண்ணிருந்தா, ‘இன்னும் ஒரு பீஸ் சாப்பிடு, இன்னொரு பீஸ் சாப்பிடு’னு போடுவாங்க எனக்கு. ஆனா முருங்கைக்காய் குழம்பு வைச்சிருக்கும் போது, நாமளே கேட்டோம்னாக் கூட, ‘சாறுடா’ன்னு சாம்பாரைத்தான் ஊத்துவாங்களே தவிர, முருங்கைக்காயை போடமாட்டாங்க.

எங்க மாமாவுக்கெல்லாம் போடுவாங்க. எனக்கு போடமாட்டாங்க. ’முந்தானை முடிச்சு’ல பரிமளா எப்படி சின்னச்சின்ன பசங்களோட சேர்ந்து சேர்ந்து சுத்திட்டிருந்தா. அதுமாதிரி எங்க ஊர்ல பெரியமனுஷன் ஒருத்தர் சின்னப் பசங்க எங்களோட சுத்திட்டிருந்தாரு. அவர், எப்பவுமே சின்னப்பசங்க கூட சுத்துவாரு. அவர்கிட்ட, ‘அண்ணே அண்ணே ஒரு டவுட்டுண்ணே’ன்னு கேப்போம். ’ஏன் முருங்கைக்காயை மட்டும் போடமாட்டேங்கிறாங்க. மட்டன், சிக்கன்லாம் போடுறாங்களே ஏன்’னு கேட்டோம். ‘அது கொஞ்சம் டிரபிள் பண்ணும்டா. உங்க மாமாவுக்கெல்லாம் கல்யாணம்லாம் ஆயிருச்சு. அதனால ஒண்னுமில்ல. உங்களுக்குப் பிரச்சினைடா’ன்னு சொன்னார்.

’புரிஞ்சுக்கடா... சும்மா இதைப்போய் நொய்நொய்னு கேட்டுக்கிட்டே இருக்கே’ன்னு சொன்னார். இதைத்தான் பின்னாடி, ‘முந்தானை முடிச்சு’ல வைச்சேன்.

ஆனா பாரு... இத்தனை வருஷமானாலும் சொல்றதுக்கு எனக்கு சங்கோஜமா, வெட்கமா இருக்கு. நீதான் வெட்கமே இல்லாம கேட்டுக்கிட்டே இருக்குறே’’ என்று கேலியும் கிண்டலுமாகச் சொன்னார் பாக்யராஜ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x