Published : 22 Jun 2020 03:21 PM
Last Updated : 22 Jun 2020 03:21 PM

ஆம்! எனக்கு விசேஷ சலுகை உண்டு; அதில் அவமானமில்லை: சோனம் கபூர் பதிலடி

தன்னை வாரிசு நடிகை என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வரும் கருத்துகள், ஆபாச வசவுகளுக்கு நடிகை சோனம் கபூர் பதிலளித்துள்ளார்.

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூரின் பக்கத்திலும் பலர் அவருக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டனர். வாரிசு அரசியலால்தான் அவர் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும், இப்படியானவர்களால் பாதிக்கப்பட்டுதான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்றும் பலர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சோனம் கபூர் பதிலளித்துள்ளார்.

"தந்தையர் தினமான இன்று நான் இன்னொரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். ஆம்! நான் என் தந்தையின் மகள்தான். அவரால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். ஆம்! எனக்கு விசேஷ சலுகை இருக்கிறது. அது ஒன்றும் அவமானமல்ல. எனக்கு இதையெல்லாம் தர என் தந்தை கடுமையாக உழைத்திருக்கிறார். நான் எங்கு பிறந்தேன், யாருக்குப் பிறந்தேன் என்பதெல்லாம் என் விதி. அவரது மகளாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்" என்று சோனம் கபூர் பகிர்ந்துள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் தனக்கு அறிமுகமில்லாதவர்கள் தனக்கு அனுப்பிய அவதூறுச் செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்டையும் சோனம் கபூர் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கருத்துப் பதிவிடும் வசதியை சோனம் முடக்கியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு இதே போன்ற அவதூறு கருத்துகளால் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது ட்விட்டர் கணக்கையே முடக்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x